திருகோணமலை மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்தின் ஏற்பாட்டில், தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் பயன்பாட்டின் மூலம் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் நோக்கில் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியானது நேற்று (26) அரச உத்தியோகத்தர்களுக்கு, மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வானது திருகோணமலை மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர் எஸ்.கே. டி. நெரஞ்சன் அவர்களின் தலைமையில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன் அவர்களின் பங்குபற்றலுடன் நடைபெற்றது.
இதன்போது தேர்தல் சேவைகளை மக்கள் எவ்வாறு பயனுள்ளதாகப் பயன்படுத்துவது, வாக்காளர் பதிவுத் தகவல்களை திருத்தம் மற்றும் மாற்றம் செய்யும் முறை, டிஜிட்டல் தளங்களின் மூலம் சேவைகளைப் பெறும் நடைமுறைகள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன.
மேலும், டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் பயன்பாட்டின் மூலம் தேர்தல் சேவைகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாகவும் விளக்கங்கள் வழங்கப்பட்டன.
குறிப்பாக இளைஞர்கள் டிஜிட்டல் தளங்களை பொறுப்புடன் பயன்படுத்தி ஜனநாயக மதிப்புகளை பாதுகாக்க வேண்டிய அவசியம் வலியுறுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்தின் தகவல் தொழில்நுட்ப அலுவலர் த. வினோதன் அவர்கள் வளவாளராக கலந்து கொண்டு சிறப்பித்தார். இறுதியாக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) ஜெ. ஸ்ரீபதி அவர்களின் உரையுடன் இவ்விழிப்புணர்வு நிகழ்வு நிறைவடைந்தது.
இந்நிகழ்வு, ஜனநாயக மதிப்புகளை பாதுகாக்கவும், தேர்தல் செயல்முறைகளில் பொது மக்களின் செயற்பாட்டை மேம்படுத்தவும், குறிப்பாக வாக்காளர் தினத்தை முன்னிட்டு தொடங்கப்பட்ட முக்கியமான முயற்சியாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது.
ஹஸ்பர் ஏ.எச்_





