இலங்கையில் தற்போது அடையாள விவரங்கள் சரிபார்க்கப்படாத சுமார் 9 இலட்சம் மொபைல் சிம் கார்டுகள் செயல்பாட்டில் உள்ளதாக டிஜிட்டல் பொருளாதார துணை அமைச்சர் எரங்க வீரரத்ன நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த சிம் கார்டுகளுக்கான சரியான அடையாள தகவல்கள் வழங்கப்படாவிட்டால், அவை செயலிழக்கச் செய்யப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
மேலும் அவர் கூறுகையில்,
இதுவரையில் மொத்தமாக 897,802 சிம் கார்டுகளுக்கு உரிய அடையாள சரிபார்ப்பு செய்யப்படவில்லை.
2019 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சிம் பதிவு முறையில் இருந்த குறைபாடுகளை சரிசெய்யவே தற்போது புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்படுகின்றன.
மேலும், தற்போது 245,811 வணிக சிம் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளன.
பதிவு செய்யப்படாத சில சிம் கார்டுகள் கொள்ளை உள்ளிட்ட கடுமையான குற்றச் செயல்களுக்கு பயன்படுத்தப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
குற்றங்களை விசாரிக்க காவல்துறைக்கு சரியான தகவல்கள் மிகவும் அவசியம்.
இந்த தகவல்கள் இல்லாததால் குற்றச் செயல்கள் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் அவர் கூறினார்.
எனவே, முறையாக பதிவு செய்யப்படாத சிம் கார்டுகளை பயன்படுத்தும் அனைவரும் உடனடியாக தேவையான அடையாள தகவல்களை வழங்க வேண்டும் .
அதனை செய்யாவிட்டால் அந்த சிம் கார்டுகள் நிறுத்தப்படும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.
இந்த நடவடிக்கை குற்றங்களை கட்டுப்படுத்தவும், நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் எடுக்கப்பட்டதாகவும், இது தேவையற்ற கட்டுப்பாடு அல்ல என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.





