கிழக்கில் கடலுக்குள் மூழ்கிக்கொண்டிருக்கும் அட்டப்பள்ளம் கிராமம்.

 




அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாரம்பரியத் தமிழ் கிராமமான அட்டப்பள்ளம், பாரிய கடலரிப்பு காரணமாக வரைபடத்திலிருந்து மறையும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது. 

கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் சுமார் 500 மீற்றருக்கும் அதிகமான நிலப்பரப்பு கடலுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளதாகப் பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கடலரிப்பு காரணமாக இதுவரை 20க்கும் மேற்பட்டவர்களின் தனியார் காணிகள் முழுமையாகக் கடலுக்குள் சென்றுள்ளன.

இப்பகுதியில் தென்னை உற்பத்தியையே வாழ்வாதாரமாகக் கொண்ட மக்களின் ஏராளமான தென்னை மரங்கள் தினமும் கடலில் மூழ்கி வருகின்றன.

ஒலுவில் துறைமுகம் அமைக்கப்பட்ட காலத்திலிருந்தே கடலரிப்பு காணப்பட்ட போதிலும், அண்மைக் காலமாகவே இது பாரிய அழிவை ஏற்படுத்தி வருவதாக மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அருகிலுள்ள பகுதியில் செல்வாக்குமிக்க அரசியல்வாதி ஒருவர் தன்னிச்சையாகக் கடலுக்குள் பாறைக் கற்களைக் கொட்டியுள்ளமையே, தமது குடியிருப்புப் பகுதிகளில் கடலரிப்பு தீவிரமடையக் காரணம் என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். 


இது குறித்து கரையோரப் பேணல் திணைக்களம் உள்ளிட்ட பல தரப்பினருக்கு அறிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

"இரவில் தூங்கும்போது கடல் எங்களைக் கொண்டு சென்றுவிடுமோ என்ற அச்சத்துடனேயே வாழ்கிறோம்" என கரையோர மக்கள் தமது அன்றாட அவல நிலையை விவரிக்கின்றனர். தமது பகுதிகளிலும் பாதுகாப்பு அரண்களாகக் கற்களைப் போடுவதன் மூலமே கிராமத்தைக் காப்பாற்ற முடியும் என அவர்கள் நம்புகின்றனர்.

குறித்த பகுதியில் ஆறு இடங்களில் கடலரிப்பைத் தடுப்பதற்கான அணைகளை அமைக்கத் திட்ட முன்மொழிவுகள் அனுப்பப்பட்டுள்ளன. பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலும் இது குறித்து தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன என நிந்தவூர் பிரதேச செயலாளர் ஏ.எல். அப்துல் லத்தீப் தெரிவித்தார். 

நேற்றைய தினம் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா குறித்த பகுதிக்கு விஜயம் செய்து, தடுப்புப் பணிகளைத் துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.