காத்தான்குடி இரு ஊடகவியலாளர்களுக்கு “தேசத்தின் காவலர்” விருது வழங்கி கௌரவிப்பு!




தேசத்தின் பாதுகாப்புக்கும் சமூக நலனுக்கும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றியவர்களை கௌரவிக்கும் நோக்கில் வழங்கப்படும் “தேசத்தின் காவலர்” விருது வழங்கும் நிகழ்வு, சனிக்கிழமை (10) காத்தான்குடியில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில், பிரதம அதிதியாக இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழி பீடத்தின் தலைவர் பேராசிரியர், கலாநிதி எஸ்.எம்.எம். நபீஸ் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தார்.

கௌரவ அதிதிகளாக இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரத் துறை பேராசிரியர், கலாநிதி ஏ.ஏ.எம். நுபைல், ஓய்வுநிலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.ஏ. நவாஸ், ஓய்வுநிலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எம். ஜௌபர், முன்னாள் இராணுவ அதிகாரி மேஜர் ஜூனைட் நபீர், சட்டத்தரணி முஹைதீன் சாலி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில், அரச பாதுகாப்புத் துறையில் பங்களிப்பு செய்தவர்களையும், சமூக நலனுக்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய சமூக செயற்பாட்டாளர்களையும், ஊடகவியலாளர்களையும் கௌரவிக்கும் வகையில் பலருக்கு “தேசத்தின் காவலர்” விருதுகள் வழங்கப்பட்டன.

அதன் முக்கிய அம்சமாக, இன, மத பேதமின்றி அனைத்து சமூகங்களின் நலனுக்காகவும் ஊடகத் துறையில் பல ஆண்டுகளாக சேவையாற்றி வரும் காத்தான்குடியைச் சேர்ந்த எஸ். சஜீத் – சக்தி நியூஸ் பெஸ்ட், மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய செய்தியாளர் மற்றும் எம்.எஸ்.எம். சஜீ – ரூபவாஹினி, நேத்ரா, வசந்தம் மற்றும் டெலன்ட் ஊடகங்களின் ஊடகவியலாளர் ஆகிய இரு ஊடகவியலாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

இவ்விரு ஊடகவியலாளர்களுக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகளினால் பொன்னாடை அணிவித்து நினைவுச் சின்னம் வழங்கி விசேடமாக கௌரவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஓய்வுபெற்ற இராணுவ மற்றும் பொலிஸ் அதிகாரிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் என பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். 

இந்நிகழ்வானது எக்ஸத் ஊடக வலையமைப்பின் பணிப்பாளர் ஜெ.எல்.எம். ஷாஜஹான் தலைமையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.