இலங்கைக்கும் இந்தியாவுக்கு இடையிலான
தரைவழி பாதைத் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் பதிலுக்காக தாம்
காத்திருப்பதாக இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று
இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இரண்டு நாடுகளுக்கும் இடையிலான தரைவழி
போக்குவரத்து தொடர்பிலான யோசனையை, இலங்கை அரசாங்கமே முன்வைத்தது. அதனை
முன்னெடுத்துச் செல்ல, இந்தியா தயாராக இருக்கிறது.
எனினும், இலங்கை அரசாங்கம் அது தொடர்பில் எவ்வித முன்னெடுப்புகளையும் மேற்கொள்ளவில்லை என்றும் உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோன்று, இலங்கை - இந்திய சுதந்திர
வர்த்தக உடன்படிக்கையான எட்கா தொடர்பிலும் இலங்கையின் பதிலை இந்தியா
எதிர்பார்த்திருப்பாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான
எரிபொருள் விநியோக கட்டமைப்புத் தொடர்பில் நிதியளிப்பு தொடர்பான ஆலோசனைகள்
தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்திய உயர்ஸ்தானிகர்
தெரிவித்துள்ளார்.
அதேபோன்று, இந்திய வீடமைப்பு
திட்டத்தின் கீழ் பெருந்தோட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்படும் 10 ஆயிரம்
வீட்டுத்திட்டத்தில் 3300 வீடுகளின் நிர்மாணப் பணிகள் ஏற்கனவே
முன்னெடுக்கப்பட்டுள்ளன.
எனினும், எஞ்சிய 6700 வீடுகளை டிட்வா
பாதிக்கப்பட்ட அல்லது, எதிர்காலத்தில் அனர்த்தங்களினால் பாதிக்கப்படவுள்ள
மக்களுக்கு வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகரகம்
தெரிவித்துள்ளது.





