உழவர்
திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு நாவிதன்வெளி பிரதேச சபையின்
ஏற்பாட்டில் நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன்
தலைமையில் பொங்கல் திருவிழா (26) திங்கட்கிழமை கோலாகலமாக
இடம்பெற்றது.
கலை கலாசார
பாரம்பரிய அறுவடை ,புதிர் எடுத்தல் ,நெல் குற்றி புத்தரிசி எடுத்து பொங்கல்
வைக்கும் நிகழ்வுகள் பிரதம அதிதியாக கலந்து கொண்ட அம்பாறை மாவட்ட உதவி
உள்ளூராட்சி ஆணையாளர் ஐஎஸ்ஏ. கமல் நெத்மினியினால் ஆரம்பித்து
வைக்கப்பட்டது.
உழவர்
கண்காட்சி மற்றும் பாடசாலை மாணவர்களினால் கலை கலாசார பண்பாட்டு
விழுமியங்களை பறைசாற்றும் வண்ணம் நடனங்கள் , சிலம்பம் என பற்பல நிகழ்வுகள்
இடம்பெற்றிருந்தது.
இங்கு தவிசாளர் அவர்கள் உரையாற்றுகையில்
தைப் பொங்கல் என்பது
ஒரு சமய விழா மட்டும் அல்ல…
ஒரு உழைப்பின் திருவிழா.
விவசாயியின் வியர்வைக்கு மரியாதை செலுத்தும் நாள்.
இயற்கைக்கு நன்றி கூறும் நாள்.
ஒற்றுமையும் பகிர்வும் மலர்கின்ற நாள்.
“தை பிறந்தால் வழி பிறக்கும்”
என்ற பழமொழிக்கு ஏற்ப,
இந்த தை மாதம்
நம் அனைவருக்கும்
புதிய நம்பிக்கையையும்
புதிய பாதையையும்
புதிய முன்னேற்றத்தையும்
கொண்டு வர வேண்டும்.
நாவிதன்வெளி பிரதேசம் என்பது
பல இனங்கள், பல மதங்கள், பல பண்பாடுகள்
ஒற்றுமையாக வாழும்
ஒரு அழகான பூங்கா போன்றது
அந்த ஒற்றுமையே
நம் பலம்…
நம் வளர்ச்சியின் அடித்தளம்.
பிரதேச சபை தவிசாளராக,
மக்களின் நலன்,
இளைஞர்களின் எதிர்காலம்,
விவசாய வளர்ச்சி,
கல்வி, சுகாதாரம்,
அடிப்படை வசதிகள்
என அனைத்திலும்
நாம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம்.
இந்த தைப்பொங்கல்
எங்கள் மக்களின் வாழ்வில்
மகிழ்ச்சி பொங்கட்டும்,
நலம் பொங்கட்டும்,
ஒற்றுமை பொங்கட்டும் என தெரிவித்தார்.
அதிதிகளாக
கலந்து சிறப்பித்த அதிதிகள் அனைவருக்கும் தமிழர் மாண்பை எடுத்தியம்பும்
விதமாக நினைவு சின்னங்கள் மற்றும் நவ தானியங்கள் அடங்கிய பொற்கிழிகள்
வழங்கி பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த
தமிழர் பாரம்பரிய பொங்கல் நிகழ்விற்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட உதவி
உள்ளூராட்சி ஆணையாளர் கமல் நெத்மினி,பிரதம அதிதியாக முன்னாள் நாவிதன்வெளி
பிரதேச சபை தவிசாளர், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர், முன்னாள்
பாராளுமன்ற உறுப்பினருமாகிய தவராசா கலையரசன், முன்னாள் பிரதி பிரதம
செயலாளர் மு. கோபாலரெத்தினம்,முன்னைநாள் தவிசாளர்கள் , நாவிதன்வெளி பிரதேச
சபை உப தவிசாளர் கு. புவனரூபன் , நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர்கள்,
நாவிதன்வெளி பிரதேச சபை செயலாளர்,சுகாதார வைத்திய அதிகாரி,பாடசாலை
மாணவர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
(வி.ரி. சகாதேவராஜா)



















