50 கோடி ரூபா பெறுமதியான 'குஷ்' போதைப்பொருட்களுடன் இந்தியாவைச் சேர்ந்த இரண்டு பெண் ஆசிரியர்கள் உட்பட மூவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது .

 


இந்தியாவின் மும்பையைச் சேர்ந்த இரண்டு பெண் ஆசிரியர்கள் உட்பட மூவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று(06) கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் இவர்களிடமிருந்து சுமார் 50 கோடி ரூபா பெறுமதியான 'குஷ்' போதைப்பொருள் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.

 கைது செய்யப்பட்டவர்கள் இந்தியாவின் மும்பையைச் சேர்ந்த இரண்டு பெண்களும் ஒரு ஆணுமாவர். 27 வயதான ஆண் மும்பையில் உள்ள தொலைபேசி பரிமாற்ற நிலையமொன்றில் பணிபுரிபவர் என்றும், 25 மற்றும் 31 வயதுடைய மற்றைய இரு பெண்களும் மும்பையில் பணிபுரியும் பாடசாலை ஆசிரியைகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட பெண்களில் ஒருவர் அந்த நபரின் மனைவி எனவும் மற்றைய பெண் அவரது சகோதரி எனவும் தெரியவருகிறது.

அவர்களுக்கு பாங்கொக் சுற்றுலாவுக்கான வாய்ப்பு பெற்றுத் தருவதாக போதைப்பொருள் கடத்தல்காரர்கள் உறுதியளித்து, இந்த போதைப்பொருள் தொகையை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளமை சுங்க அதிகாரிகளின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவர்கள் இன்று காலை 11.07 மணிக்கு தாய்லாந்தின் பாங்கொக்கில் இருந்து சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான UL-403 விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

அவர்கள் கொண்டு வந்த 3 பயணப் பொதிகளில் 1 கிலோ 100 கிராம் எடை கொண்ட 48 பொதிகளில், மொத்தம் 50 கிலோகிராம் 'குஷ்' போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் மற்றும் கைது செய்யப்பட்ட மூன்று இந்தியர்களும் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.