முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று (28) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில், உத்தியோகபூர்வ பயணம் என்ற போர்வையில் தனது பாரியாரான பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்குத் தனிப்பட்ட பயணம் மேற்கொண்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த பயணத்தின் ஊடாக அரசாங்கத்துக்கு 1.5 கோடி ரூபாவிற்கும் அதிக நஷ்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறி, கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ஆம் திகதி அவர் கைது செய்யப்பட்டு, கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து ஓகஸ்ட் 26ஆம் திகதி வரை அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
விளக்கமறியலில் இருந்தபோது ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக, சிறைச்சாலை வைத்தியர்களின் பரிந்துரையின் பேரில் அவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்தநிலையில், கடந்த ஆகஸ்ட் 26ஆம் திகதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அவர் வைத்தியசாலையில் இருந்தவாறே ஸ்கைப் (Skype) தொழில்நுட்பம் ஊடாக நீதிமன்ற நடவடிக்கைகளில் கலந்துகொண்டார்.
அன்றைய தினம் அவருக்கு நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதி வழங்கியது.





