பாம்பு விஷம் நீக்கி ஆயிரக்கணக்கானவர்களின் உயிரை காப்பாற்றிய 20 வயதான சந்துனி நிசான்சா மர்ம நோயினால் உயிரிழந்துள்ளார்.

 


களுத்துறை, மத்துகம பகுதியை சேர்ந்த 20 வயதான சந்துனி நிசான்சா என்ற யுவதி மர்ம நோயினால் உயிரிழந்துள்ளார்.

எதிர்பாராத உடல்நலக் குறைவால் கொழும்பு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த யுவதி உயிரிழந்துள்ளார்.

தனது 6 வயதிலேயே பாம்பு விஷம் நீக்கும் பாரம்பரிய மருத்துவ முறையைத் தொடங்கி, குறுகிய காலத்தில் ஆயிரக்கணக்கான நோயாளிகளை குணப்படுத்தியுள்ளார்.

100 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியம் கொண்ட தனது தாத்தாவிடம் இருந்து இக்கலையைக் கற்றுக்கொண்ட சந்துனி, தந்தையை விடவும் மிகச் சிறந்த ஆற்றல் கொண்டவராக திகழ்ந்தார்.

புகையை சுவாசிக்கச் செய்தல், மந்திரங்கள் மற்றும் விரல் நுனியால் தரையைத் தட்டி விஷத்தை வெளியேற்றும் அபூர்வ முறைகளைக் கையாண்டு இவர் சிகிச்சை அளித்துள்ளார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் நள்ளிரவில் வரும் நோயாளிகளுக்குக் கூட, விடியற்காலை வரை விழித்திருந்து எவ்விதக் கட்டணமும் இன்றி இலவசமாகவே மருத்துவம் செய்து வந்தார்.

கல்வித் துறையிலும் சிறந்து விளங்கிய அவர், கெவிட்டியகல மகா வித்தியாலயம் மற்றும் மத்துகம புனித மேரி கல்லூரியில் பயின்று, கலைப் பிரிவில் உயர்தரக் கல்வியை முடித்திருந்தார்.

ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டிருந்த சந்துனி, உயிரிழப்பதற்கு சில நாட்களுக்கு முன்பே வாழ்க்கையின் நிலையற்ற தன்மையை உணர்ந்து, தான் மறைந்தாலும் தம்பி தாயை கவனித்துக் கொள்வார் என்று உருக்கமாகக் கூறியுள்ளார்.

கண்பார்வை பாதிப்பில் தொடங்கிய இவரது நோய், பின்னர் இதயம் 20 சதவீதம் மட்டுமே வேலை செய்யும் நிலைக்குச் சென்றது. இதன் போதும், அவர் மரணத்தைக் கண்டு அஞ்சாமல் அமைதியாக எதிர்கொண்டார்.

ஒரு மாத காலமாகத் தீவிர சிகிச்சைப் பிரிவில் போராடிய சந்துனி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தமை அந்தப் பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.