2026 ஜனவரியில் 4.4 மில்லியனுக்கும் அதிகமான (44 இலட்சம்) மாணவர்களுக்கு இலவச பாடசாலை சீருடைகள் வழங்கப்படவுள்ளன.

 


கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் விசேட திட்டத்தின் கீழ், 2026 ஜனவரி மாதத்தில் நாடு முழுவதும் உள்ள 4.4 மில்லியனுக்கும் அதிகமான (44 இலட்சம்) மாணவர்களுக்கு இலவச பாடசாலை சீருடைகள் வழங்கப்படவுள்ளன. 
 
அரசாங்கப் பாடசாலைகள் மற்றும் அரச உதவி பெறும் பாடசாலைகளின் மாணவர்கள், அத்துடன் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பிரிவெனாக்களில் கல்வி பயிலும் மாணவர் பிக்குகள் மற்றும் ஏனைய மாணவர்கள் அனைவருக்கும் இந்தச் சீருடைகள் வழங்கப்படும். 
 
சீன மக்கள் குடியரசினால் முழுமையான நன்கொடையாக வழங்கப்பட்ட 11.484 மில்லியன் மீற்றர் சீருடைத் துணிகளைக் கொண்டு இத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. 
 
இதற்கான அனைத்துத் துணித் தொகுதிகளும் ஏற்கனவே துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. 
 
இந்த நன்கொடையை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளும் விழா, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரின் தலைமையில் 2026 ஜனவரி 13 ஆம் திகதி நடைபெறவுள்ளது. 
 
எதிர்வரும் ஜனவரி 19 ஆம் திகதி முதல் சீருடைத் துணிகளைப் பிரதேச கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. 
 
புதிய கல்வி ஆண்டு தொடங்குவதற்கு முன்னதாகவே மாணவர்கள் சீருடைகளைப் பெற்றுக்கொள்வதை உறுதி செய்ய கல்வி அமைச்சு சகல ஏற்பாடுகளையும் செய்துள்ளது.