16 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் வல்லுறவு செய்த குற்றவாளிக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வவுனியா, விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 16 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் வல்லுறவு புரிந்த குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.எம்.மிஹால் தீர்ப்பளித்துள்ளார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு யூன் மாதம் 18 ஆம் திகதி வவுனியா, விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 16 வயதுக்கு உட்பட்ட சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு செய்ததாக அதே இடத்தைச் சேர்ந்த 33 வயது சந்தேக நபரை பொலிசார் கைது செய்து, அறிக்கை மூலம் வவுனியா நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தி வழக்கு தொடரப்பட்டது.
தொடர்ந்து 2023 டிசம்பர் 22 ஆம் திகதி, பாலியல் வன்புணர்வு புரிந்ததாக சந்தேக நபருக்கு எதிராக சட்டமா அதிபர் திணைககளத்தால் குற்றப் பகிர்வுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு வவுனியா மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
குறித்த வழக்கு அரச சட்டவாதி ஸ்ரீ.சிவஸ்கந்தஸ்ரீ அவர்களால் நெறிப்படுத்தப்பட்ட நிலையில், குறித்த வழக்கின் சந்தேக நபரான வவுனியா விநாயகபுரம் பகுதியில் வசித்து வந்த 33 வயது நபர் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் வழக்கு விசாரணையின் போது உறுதி செய்யப்பட்டது.
குறித்த வழக்கு தீர்ப்புக்காக நேற்றைய தினம் (09) திகதி இடப்பட்டிருந்த நிலையில் வழக்கு விசாரணைகளை அடிப்படையாகக் கொண்டு தீர்ப்பினை வவுனியா மேல் நீதிமன்றம் வழங்கியது.
இதன்போது, வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.எம்.மிஹால் திறந்த நீதிமன்றில் தீர்ப்பினை வாசித்துக் காட்டினார்.
குறித்த குற்றவாளிக்கு 10 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கியதுடன், 10 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறும், தவறின் 2 மாதகால சாதாரண சிறைத் தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இரண்டு இலட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் தவறின், ஒரு வருட சிறை தண்டனையும் வழங்கி தீர்ப்பு அளிக்கப்பட்டது





