அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பண்டிகை முற்பணம் 15,000 ரூபாவாக அதிகரிப்பு .

 


அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பண்டிகை முற்பணத்தை 15,000 ரூபாவாக அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

தற்போது நடைமுறையிலுள்ள தாபன விதிக்கோவை ஏற்பாடுகளுக்கமைய, அரச ஊழியர் ஒருவர் தைப்பொங்கல், ரமழான், சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு, வெசாக், தீபாவளி, நத்தார் போன்ற பண்டிகைகளுக்காகவும், சிவனொளிபாத மலை தரிசனம் மற்றும் ஹஜ் கடமை போன்ற யாத்திரிகப் பயணங்களுக்காகவும் 10,000 ரூபாவை முற்பணமாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த முற்பணத் தொகையானது எவ்வித வட்டியுமின்றி 08 மாதத் தவணைகளில் மீள அறவிடப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், குறித்த முற்பணத் தொகையை 15,000 ரூபாவாக அதிகரிப்பதற்கு 2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டு திட்டத்தின் மூலம் முன்மொழியப்பட்டிருந்தது.

அதற்கமைய அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பண்டிகை முற்பணத்தை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.