மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் பாரளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான செல்லையா இராசதுரை சென்னையில் இன்று காலமானார்.

 








தந்தைசெல்வாவால் அரசியலுக்குள் அழைத்து வரப்பட்ட செல்லையா இராசதுரை மு.பா.உ  காலமானார்!

1927,யூலை,27.ல் மட்டக்களப்பு நகர் புளியந்தீவில் பிறந்த செல்லையா இராசதுரை அவர்கள் 2025, டிசம்பர்,07, ல் சென்னையில் 98, அகவையில் இறைபதம் அடைந்தார்

மட்டக்களப்பு அரசடி வித்தியாலயத்தில் (தற்போது மகாஜனகல்லூரி) ஆரம்பக் கல்வியை முடித்து, பின்னர் மெதடிஸ்த மத்திய கல்லூரியில்உயர்தரக் கல்வியை முடித்தார். இராசதுரை ஊடகவியலாளரும், சுதந்திரன் பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் பணியாற்றினார்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின்வேட்பாளராக முதன் முதலாக தந்தைசெல்வாவால் மட்டக்களப்பு தொகுதியில் 1956 நாடாளுமன்றத் தேர்தலில்போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம்சென்றார்.

தொடர்ந்து மார்ச் 1960, யூலை 1960, 1965, 1970 தேர்தல்களிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.தமிழரசுக் கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்ததை அடுத்து 1977 தேர்தலில் கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

1979 பெப்ரவரி 10 இல் இவர் தமிழரசுக் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இவரை ஆளும் கட்சியில் இணைப்பதற்காக 1979 பெப்ரவரி 22 இல் அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வரப்பட்டு, 1979 மார்ச் 7 இல் ஜே. ஆர். ஜெயவர்தனா தலைமையிலான ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தார். இதற்காக அவருக்கு இந்து சமய, பண்பாட்டு, தமிழ் அமுலாக்கல், பிரதேச அபிவிருத்தி அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.பின்னர் இவர் மலேசியாவுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டு மலேசியா சென்றார்.

பணியில் இருந்து இளைப்பாறிய பின்னர் புலம் பெயர்ந்து மலேசியாவில் சிலகாலம் வாழ்ந்து பின்னர் சென்னையில் வசித்தார்.

இராசதுரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் 1967 ஆம் ஆண்டில் மட்டக்களப்பு மாநகர சபையின் முதலாவது முதல்வராக ஓராண்டு காலத்திற்குப் பதவியில் இருந்தார்.

ஏறக்குறைய 33, வருடங்கள் பாராளுமன்ற உறுப்பினராக வடகிழக்கில் தொடர்சியாக மக்களால் தெரிவானவர் இவர் மட்டுமே..

மட்டக்களப்பு மாநகரசபையின் முதலாவது மாநகர முதல்வரும் இவரே.

1973,செப்டம்பர்,07,ல் யாழ்ப்பாணம் மல்லாகத்தில் இடம்பெற்ற இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி மகாநாட்டில் தலைவராக செல்லையா இராசதுரை அவர்களும். அ.அமிர்தலில்கம் அவர்களும் விரும்பி இருவரும் தலைவர் பதவியை மெறுவதற்காக போட்டி நிலை உருவானவேளையில் தந்தை செல்வா அவர்கள் தலையிட்டு இருவரையும் சாந்தப்படுத்தி செல்லையா இராசதுரையை விட்டுக்கொடுக்கொடுக்குமாறு கூறி அ.அமிர்தலிங்கத்தை தலைவராக தெரிவுசெய்தார்.

1977,யூலை,21, ல் இறுதியாக நடைபெற்ற தொகுதிவாரியான தேர்தலில் தமிழர் விடுதலைக்கூட்டணியில் மட்டக்களப்பு இரட்டை அங்கத்தவர் தொகுதியில் இவரை தோற்கடிக்க கவிஞர் காசி ஆனந்தனை இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி வேட்பாளராகவும், செல்லையா இராசதுரையை தமிழர் விடுதலை கூட்டணியிலும் போட்டியிட வைத்தபோதும் இவரே வெற்றிபெற்றார்.

தமிழர் விடுதலைகூட்டணியின் தலைமை விட்ட பொறுப்பற்ற செயலால் இருவரை வேட்பாளராக நிறுத்தியபோதும் செல்லையா இராசதுரை அவர்களே வெற்றிபெற்றார் இதனால் அவர் தமிழர் விடுதலை கூட்டணி தலைமை தமக்கு துரோகம் செய்ததாக கூறியபின்னர் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து இந்துகலாசார அமைச்சர் பதவி பெற்றார்.

மட்டக்களப்பு இரட்டை அங்கத்தவர் தொகுதி ஏன் உருவானது என்பது ஒரு தமிழரும், ஒரு முஷ்லிம் உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினராக பிரதிநித்துவம் பெறுவதற்காகவே இரட்டை தொகுதியானது இந்த விடயத்தை அறியாத அல்லது அறிந்தும் இரண்டு தமிழர்களை ஒருதலைமையான தமிழர் விடுதலை கூட்டணி அ.அமிர்தலிங்கம் தலைமை எடுத்த முடிவானது செல்லையா இராசதுரையை தோற்கடிப்பதற்கே ஆனால் மட்டக்களப்பு தொகுதி மக்கள் மீண்டும் அவரையே வெற்றிபெறவைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் எழுதிய நூல்கள்:

* ராசாத்தி – குறும் புதினம் – 1982
* பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் – சொற்பொழிவுகளின் தொகுப்பு
* அன்பும் அகிம்சையும் – தேசிய ஒற்றுமைக்கு வழி – 1984
* மிஸ் கனகம் – சிறுகதைத் தொகுப்பு
* இலங்கையில் மகா அஸ்வமேதயாகம்

அன்னாரின் அரசியல் வாழ்வு மட்டக்களப்பில் 1977, க்கு முன்னர் தமிழ்தேசிய அரசியலுக்கு அத்திவாரம் இட்டது என்பதை எவரும் மறுக்கமுடியாது..!

-பா.அரியநேத்திரன்
07/12/2025