நான் முன்னாள் இராணுவத் தளபதியாக இருந்தாலும் உண்மையில் நான் ஒரு ஜனநாயகவாதி. நான் எப்போதும் ஜனநாயகத்தின் பிரகாரமே செயற்பட்டு வருகின்றேன் என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
சரத் பொன்சேகா ஒரு சர்வாதிகாரி என்று தென்னிலங்கை அரசியல்வாதிகள் தெரிவித்துள்ள கருத்துக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
"என்னைச் சர்வாதிகாரி என்றும், நான் தலைவரானால் சர்வாதிகாரப் போக்கே நிலவும் என்றும் பலர் கூறுகின்றனர். உண்மையில் நான் ஒரு ஜனநாயகவாதி.
நான் சர்வாதிகாரியென்றால், இறுதிப் போரின் பின்னர் என்னால் மிக இலகுவாக ஆட்சியைக் கைப்பற்றியிருக்க முடியும். ஆனால், நான் அவ்வாறு செயற்பட விரும்பவில்லை. ஏனெனில், நான் எப்போதும் ஜனநாயகத்தின் பிரகாரமே செயற்பட்டு வருகின்றேன்.
இராணுவத்தில்கூட சர்வாதிகார உத்தரவுகளை நான் பிறப்பித்ததில்லை. ஆனால், நாடு முன்னேற வேண்டுமெனில் நாட்டை நேசிக்கக்கூடிய சர்வாதிகாரி ஒருவர் அவசியம். - என்றார்.





