இலங்கையில் பாடசாலை நேர மாற்றம் அல்லது நேர நீடிப்பு என்பது இன்று ஊசலாடும் நிலைக்கு வந்துள்ளது.
ஆசிரியர்கள்
மற்றும் அதிபர்களின் தொழிற்சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ள
நிலையிலும் அடுத்த ஆண்டு (2026) ஜனவரி மாதம் முதல் பாடசாலை நேரத்தை
பிற்பகல் 2 மணி வரை நீடிக்கும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று கல்வி
அமைச்சு தெரிவித்துள்ளது.
அதே வேளை
அரசாங்கம்
பாடசாலை நேர நீடிப்பை வாபஸ் பெற வேண்டும். இன்றேல் தொழிற்சங்க
நடவடிக்கைகளில் இறங்க வேண்டி நேரிடும் என அதிபர் ஆசிரியர்கள்
தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்து ஏழாம் திகதி வெள்ளிக்கிழமை வரை கால
அவகாசம் கொடுத்துள்ளது.
பொதுவாக நோக்கினால் பாடசாலை நேரத்தை அரை மணிநேரம்
அதிகரித்தால், முழு கட்டமைப்பிலும்
மாற்றங்களை ஏற்படுத்தவேண்டும்.
அவற்றை முறையாக நடைமுறைப்படுத்தவும்
வேண்டும் என்பதே சகலரினதும்
எதிர்பார்ப்பாகும்.
அண்மையில்
மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களுக்கு விஜயம் மேற்கொண்ட பிரதமரும் கல்வி
அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய சென்ற இடமெல்லாம் கல்வி சீர்திருத்தம்
மற்றும் பாடசாலை நேர மாற்றம் தொடர்பிலேயே உரையாற்றியிருந்தார்.
குறிப்பாக
பாடசாலை நேர மாற்றம் தொடர்பில் எவ்வித பிரச்சனைகளும் தோன்றவில்லை என்
பிரதமர் கூறியிருந்தார். மறுகணம் தொழிற்சாலைகள் அதற்கு பதிலாக நாம் எழுத்து
மூலம் அரசுக்கு தெரிவித்துள்ளோம் என்று தெரிவித்துள்ளன.
இந்த நிலை ஆரோக்கியமான ஒன்றல்ல.
அரசும் தொழிற்சங்கங்களும் விடாக்கொண்டன் கொடாக்கண்டன் நிலையில் இருந்து விடுபட்டு இதற்கு நியாயமான தீர்வு காண வேண்டும்.
பாடசாலை
என்பது தனி ஒரு கல்விச் சமூகத்துடன் சம்பந்தப்பட்டதல்ல. பல சமூகங்களுடன்
தொடர்பு பட்டவை. கல்வி அமைச்சு போக்குவரத்து துறை மட்டுமல்ல குடும்பம்
என்பதால் சகல துறைகளிலும் சம்பந்தப்பட்டது பாடசாலை ஆகும்.
எனவே,அரசு
கல்விச் சமூகம் மற்றும் பாடசாலை சார்ந்த சமூகங்கள் எதிர்நோக்கும் சவால்களை
கருத்திற்கொண்டு முறையான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.
அரசின் தீர்க்கமான முடிவு!
ஆசிரியர்கள்
மற்றும் அதிபர்களின் தொழிற்சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ள
நிலையிலும் அடுத்த ஆண்டு (2026) ஜனவரி மாதம் முதல் பாடசாலை நேரத்தை
பிற்பகல் 2 மணி வரை நீடிக்கும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று கல்வி
அமைச்சு தெரிவித்துள்ளது.
“நாங்கள்
நிபுணர்கள் அல்ல; தேசிய கல்வி நிறுவனமே சீர்திருத்தங்களை வடிவமைக்கும்.
அதன் கொள்கைகளை மாற்ற முடியாது. ஏற்கனவே செலவு ஒதுக்கப்பட்டுள்ளது.” என
கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க கலுவேவ தெரிவித்துள்ளார்.
முதலில்
ஒரு பாட நேரத்தை ஒரு மணிநேரமாக நீடிக்கவிருந்தது. ஆனால், ஒரு பாட நேரம் 50
நிமிடங்களாகக் குறைக்கப்பட்டது. இதன் காரணமாகவே பாடசாலை நேரத்தை பிற்பகல் 2
மணி வரை நீடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சீர்திருத்தங்கள்
தேசிய கல்வி நிறுவனத்தின் பரிந்துரைகளின்படி செயல்படுத்தப்பட வேண்டும் என
குறிப்பிட்டுள்ளார்.
தற்போது
பிற்பகல் 1.30 மணி வரை இருக்கும் பாடசாலை நேரம், இந்தச் சீர்திருத்தத்தின்
கீழ் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை (30 நிமிடங்கள்
அதிகரிப்பு) நீட்டிக்கப்படவுள்ளது. ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின்
தொழிற்சங்கங்கள் இந்த புதிய கால அட்டவணையை எதிர்த்து வருகின்றன. எதிர்வரும்
நவம்பர் 7ஆம் திகதிக்குள் அரசாங்கம் முன்மொழியப்பட்ட கால அட்டவணையைத்
திருத்தாவிட்டால், புதிய பாடசாலைப் பருவம் தொடங்கும் போது ஒரு நாள்
வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அவர்கள் எச்சரித்துள்ளதாக அவர் மேலும்
தெரிவித்துள்ளார்.
சாதக பாதகங்கள்!
பாடசாலை நேரத்தை அரை மணிநேரம்
அதிகரித்து பிற்பகல் 2 மணிவரை நீடிக்க
உள்ளது. இந்நிலையில் இந்த அரை மணிநேர
நீடிப்பால், பல துறைகளைச் சேர்ந்தவர்களும்
கடுமையான சிரமங்களுக்கு முகங்கொடுக்க
நேரிடும்.
பாடசாலைகளுக்குச் சென்று
திரும்புவதற்கு பொதுப் போக்குவரத்து
சேவைகளைப் பயன்படுத்துவோர்,
பாடசாலை வாகனங்களைப்
பயன்படுத்துவோர் மேலதிகமாக அரை
மணிநேரம் காத்திருக்க வேண்டும்.
வேலைக்குச் செல்லும் பெற்றோர்கள்
என்றால், தங்களுடைய மதிய உணவு
நேரத்தில் பிள்ளை வீட்டுக்கு அழைத்துச்
சென்று விடுதல் பாதிக்கப்படும்.
அதுமட்டுமன்றி, ரயில்களில் பயணிக்கும்
ஆசிரியர்கள், மாணவர்களும் சிரமங்களை
எதிர்கொள்ளவேண்டிய நிலைமை ஏற்படும்.
ஆகையால்தான், போக்குவரத்துக்குத்
தேவையான மாற்றங்களை
மேற்கொள்ளுமாறு நெடுஞ்சாலைகள்
மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சுக்கு
கல்வி உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி
அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், பாடசாலை நேரத்தை
30 நிமிடங்கள் நீடிக்க நடவடிக்கை
எடுத்தால், அதற்கான நியாயமான சம்பள
உயர்வும் வழங்கப்பட வேண்டும் என்று
ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர்.
தற்போதைய பாடசாலை நேரம்
நீடிக்கப்படும் என்று கூறுவதன் மூலம்,
அவர்களுக்கு அதிக கடமைகள் மற்றும்
பொறுப்புகள் வழங்கப்படும் என்று
சுட்டிக்காட்டும் ஆசிரியர்கள்,
அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட
பொறுப்புகளை நிறைவேற்றுவதில்
நியாயமாக நடத்தப்பட வேண்டும் என்றும்
சுட்டிக்காட்டுகின்றனர்.
“கற்பித்தல் நேரத்தை நீட்டிப்பதன்
மூலம் முன்மொழியப்பட்ட திட்டத்தின்
மூலம் அவர்கள் சில உற்பத்தித்திறனை
எதிர்பார்க்கிறார்கள். பாடசாலை நேரம்
ஒரு நாளைக்கு முப்பது நிமிடங்கள்
நீட்டிக்கப்படும் என்று கூறுவதன் மூலம்,
ஆசிரியர்கள் மாதத்திற்கு இருபது
சேவை நாட்களை உள்ளடக்கும்போது
மாதத்திற்குக் கூடுதலாக பத்து மணிநேரம்
வேலை செய்ய வேண்டியிருக்கும். இந்த
வழியில், இது ஆசிரியர்களின் சம்பளத்தில்
நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்.” என்று
சுட்டிக்காட்டுகின்றனர்.
அதுமட்டுமன்றி, பாடசாலை
நிறைவடைந்து, மேலதிக வகுப்புகள்,
தனியார் வகுப்புகளுக்குச் செல்லும்
மாணவர்களும் பெரும் சிரமங்களுக்கு
முகங்கொடுக்கவேண்டிய நிலைமை
ஏற்படும். ஆகையால், பாடசாலை
நிறைவடைந்து, இன்னும் இரண்டொரு
மணிநேரத்துக்குப் பின்னரான பயண
ஏற்பாடுகளை மேற்கொள்ளும்
வகையில் போக்குவரத்தை
மறுசீரமைக்கவேண்டும்.
இதேவேளை, பெரும்பாலான அரச
பேருந்துகள், சீருடைகளில் நிற்கும்
மாணவர்களை ஏற்றிச் செல்வதில்லை.
அத்துடன், பல தூரபிரதேசங்களில் அரச
பேருந்து போக்குவரத்து ஒழுங்குமுறையில்
இல்லை என்ற குற்றச்சாட்டுகளும் உள்ளன.
குற்றச்சாட்டுகள் என்பதை விட,
அதுதான் உண்மையாகும்.
ஆகையால், அந்த பிரச்சினையையும்
நிவர்த்தி செய்ய வேண்டும்.
வருவது உயர்தர பரீட்சை. அடுத்து ஜனவரியில் பாடசாலைகள் ஆரம்பமாகும்.
எனவே அரசாங்கம் விரைந்து தீர்வு காண வேண்டும் என்பதே பலரதும் எதிர்பார்ப்பு ஆகும்.
வித்தகர் விபுலமாமணி வி.ரி. சகாதேவராஜா
காரைதீவு










