இலங்கையில் கடந்த கால அரசுகள் பயணித்ததைவிட தற்போதைய அரசின் பயணம் சிறப்பாக உள்ளது என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
தேசிய மக்கள் சக்தி அரசு, ஊழல்வாதிகள் மற்றும் மோசடியாளர்களுக்கு இடமளிக்கவில்லை என்பதை நாம் ஏற்றாக வேண்டும்.
அதேபோல ஊழல் வலையமைப்பை முற்றாக இல்லாதொழிப்பதற்கு இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். ஆனால் அதற்குரிய முயற்சி இந்த அரசால் எடுக்கப்படுவதை மதிக்கின்றோம்; வரவேற்கின்றோம்.
ரணில் விக்கிரமசிங்கதான் என்னை அரசியலுக்குக் கொண்டு வந்தார். அவரைச் சிறையில் அடைத்தபோது கவலை அடைந்தேன். எனினும், இதன்மூலம் இந்த அரசு சிறந்த முன்னுதாரணத்தை வழங்கியது.
நாட்டில் அனைவருக்கும் ஒரே கரண்டியில்தான் பகிரப்படுகின்றது என்பதே இதன்மூலம் வழங்கப்பட்ட செய்தியாகும். இதனை நாம் மதிக்க வேண்டும். - என்றார்.





