போதைப்பொருளை வியாபாரிக்கு இலங்கையில் ஆயுள் தண்டனை .

 


20 கிராம் மெதம்பெட்டமைன் (ஐஸ்) போதைப்பொருளை உடமையில் வைத்திருந்தமை மற்றும் வியாபாரம் செய்தமை தொடர்பான வழக்கில், எதிரிக்கு ஆயுள் தண்டனை விதித்து மன்னார் மாகாண மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்தக் குற்றம், கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இடம்பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இது தொடர்பான வழக்கு, நேற்றுமன்னார் மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி  எம். மிஹால் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இவ்வழக்கில், வழக்குத் தொடுநர் தரப்பிற்காக அரச சட்டவாதி  ஆறுமுகம் தனுஷன்  ஆஜராகி, வழக்கினை நெறிப்படுத்தினார். எதிரி தரப்பிற்காக ஜனாதிபதி சட்டத்தரணி யு. ஆர். டி சில்வா ஆஜராகியிருந்தார்.

வழக்கு விசாரணைகளின் முடிவில், வழக்குத் தொடுநர் தரப்பினால் முன்வைக்கப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில், எதிரி மீதான குற்றச்சாட்டு நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டதாக  நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

இதனையடுத்து, எதிரியை குற்றவாளியாக அறிவித்த நீதிபதி , எதிரிக்கு ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.