மண்டபம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட 1360 கிலோ கடல் அட்டைகள் நாட்டு படகுடன் பறிமுதல் செய்த இந்திய கடலோர காவல் படை மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் அதனை மேல் விசாரணைக்காக மண்டபம் வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
இந்திய கடலோர காவல் படை மற்றும் மண்டபம் சுங்கத்துறையினர் இணைந்து தெற்கு மன்னார் வளைகுடா கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது மண்டபம் தோனித்துறை பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த நாட்டுப்படகை சோதனை செய்தபோது அதில் 80க்கும் மேற்பட்ட சாக்கு மூட்டைகளில் சுமார் 1360 கிலோ எடை கொண்ட அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து கடல் அட்டைகளுடன் நாட்டுப்படகை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் படகில் இருந்து கடலில் குதித்து தப்பித்த மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளின் மதிப்பு ஒரு கோடி ரூபாய் இருக்கலாம் என இந்திய கடலோர காவல் படையினர் தெரிவித்துள்ளனர்.
சுங்கத்துறை மற்றும் இந்திய கடலோர காவல் படையினர் இணைந்து பறிமுதல் செய்த கடல் அட்டைகள் அடங்கிய சாக்கு மூட்டைகள் மற்றும் நாட்டு படகை மண்டபம் வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

.jpeg)

.jpeg)





