இலங்கை வரலாற்றில் முதன் முதல் வெளிநாட்டு வர்த்தகருக்கு வதிவிட விசா வழங்கப்பட்டுள்ளது .

 

திருத்தப்பட்ட குடிவரவு மற்றும் குடியகல்வு ஒழுங்கு விதிகளின் அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்ட தனிநபர் முதலீட்டாளர் பிரிவின் கீழ் இலங்கை தமது வரலாற்றில் முதல் வதிவிட விசாவை வழங்கியுள்ளது.

குறித்த விசேட விசா ஜெர்மன் நாட்டவரான ப்ரே ட்ரெக்ஸ்செல் (Dr. Prey Drechsel) என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது. 

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால உத்தியோகபூர்வமாக இந்த விசாவை கையளித்துள்ளார்.

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ், வெளிநாட்டவர்கள் முதலீடு செய்வதன் மூலம் இலங்கையில் நீண்டகால வதிவிட விசாவைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இதற்கமைய, 5 வருட வதிவிட விசாவை பெறுவதற்கு 1 இலட்சம் அமெரிக்க டொலர் அல்லது அதற்குச் சமமான வேறு வெளிநாட்டு நாணயத்தை முதலீடு செய்ய வேண்டும்.

அதேநேரம், 10 வருட வதிவிட விசாவை பெறுவதற்கு 2 இலட்சம் அமெரிக்க டொலர் அல்லது அதற்குச் சமமான வேறு வெளிநாட்டு நாணயத்தை முதலீடு செய்ய வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் தமது முதலீட்டுத் தொகையை வைப்புச் செய்வதற்கு, அங்கீகாரம் பெற்ற இலங்கையின் வங்கியொன்றில் விசா நிகழ்ச்சித்திட்ட வெளிநாட்டு நாணயக் கணக்கு ஒன்றை ஆரம்பிப்பது கட்டாயமாகும்.