'தீபம்'
என்றால் ஒளி, விளக்கு. 'ஆவளி' என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி,
இருள் நீக்கி, ஒளிதரும் பண்டிகையே தீபாவளி ஆகும். தீபத்தில் பரமாத்மாவும்,
நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தருவதாய் ஐதீகம்.
தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு அக்டோபர் 20ம் தேதி திங்கட்கிழமை அதாவது இன்று கொண்டாடப்பட உள்ளது.
உலகில்
இந்துக்கள் சீக்கியர்கள் வைணவர்கள் பௌத்தர்கள் என பல தரப்பினரும்
இந்தியாவில் மட்டுமல்லாமல் சிங்கப்பூர், மலேஷியா வங்காளதேசம், இலங்கை போன்ற
அண்டை நாடுகளிலும் தீபாவளியை வெளிச்ச நாளாக கொண்டாடுகின்றனர்.
தீபாவளி தொடர்பாக எத்தனை கதைகள் இருந்தாலும் பரவலாக பேசப்படுவது நரகாசுரனின் கதைதான்.
இது
பலருக்கும் தெரிந்த கதையாக உள்ளது. பூமாதேவிக்கும் விஷ்ணு பகவானுக்கும்
பகுமன் என்ற மகன் பிறக்கிறான். அவர் பல துர்குணங்களை பெற்றிருக்கிறான்.
அதனால் நரக அசுரன் என்று கூறப்பட்டு நாளடைவில் நரகாசுரன் என்று
அழைக்கப்படுகிறான். அவன் வளர்ந்த பிறகு தேவர்களையும் தேவலோக பெண்களையும்
மிகவும் துன்புறுத்துகின்றான். அது மட்டுமல்லாமல் பிரம்மாவிடம் தன் தாய்
கையால் மட்டுமே தான் இறக்க வேண்டும் என்ற வரத்தையும் பெற்று விடுகிறான்.
இதனை
அறிந்த மகாவிஷ்ணு ஸ்ரீ கிருஷ்ணர் அவதாரம் எடுத்து நரகாசுரனுடன்
போரிடுகிறான். அப்போது நரகாசுரன் கிருஷ்ணனின் மீது அம்பை எய்துகிறார்.
இதனால் கிருஷ்ணர் மயக்கம் அடைவது போல் கீழே விழுகின்றார். இதை பார்த்த
பூமாதேவி கோபமுற்று சத்தியபாமா என்ற அவதாரம் எடுத்து நரகாசுரனுடன்
போரிட்டு அவனை அம்பால் எய்ததால் பலியாகிறான் .
அப்போதுதான்
அவள் தன் தாய் என உணர்கிறான். இறக்கும் தருவாயில் ஒரு வரம் கேட்கிறார்..
என் பிடியில் இருந்து விடுபட்ட தேவர்களும் மக்களும் நான் இறந்த நாளை
மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என கேட்கிறார்.. அதற்கு கிருஷ்ணரும் அந்த
வரத்தை கொடுக்கிறார். இந்த வரலாற்று கதைகள் அனைத்தும் நடந்த இடம்
வடநாட்டில் தான் .
கிபி
15ஆம் நூற்றாண்டில் விஜய நகர பேரரசின் காலத்தில் இருந்துதான் தமிழ்நாட்டில்
தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதாக முனிவர் தோ பரமசிவன் அவர்கள் கூறுகிறார்
.
வட இந்தியாவில்
தீபாவளிப் பண்டிகை குறித்துப் பல்வேறு கதைகள் சொல்லப்படுகின்றன. அதில்
ஒன்று, ராமரோடு தொடர்புடையது. அதாவது ராமர் தனது 14 வருட வனவாசத்தை
முடித்துக் கொண்டு, லட்சுமணன், சீதாவுடன் அயோத்திக்கு திரும்பிய தினத்தை
அந்நாட்டு மக்கள் விளக்கேற்றிக் கொண்டாடினர். அதுவே தீபாவளி தினம் என்ற ஒரு
கதை வழக்கில் இருக்கிறது.
மற்றொரு
புராண கதையும் உள்ளது ,ஸ்கந்த புராணத்தின் படி பார்வதி தேவியின் 21 நாள்
கேதார கௌரி விரதம் முடிவடைந்த பிறகு சிவன் பார்வதியை தன்னுள் பாதியாக ஏற்று
அர்த்தநாரீஸ்வரர் உருவம் எடுத்த நாளாக கூறப்படுகிறது. இதனை
நினைவுபடுத்துவதாகவும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. மகாபாரதத்தில்
வாயிலாக ஒரு புராண கதையும் கூறப்படுகிறது . மகாபாரதத்தில் சூதாட்டத்தில்
தோற்ற பாண்டவர்கள் வனவாசம் அனுப்பப்பட்டனர் .அதன் பின் அவர்கள் போரிட்டு
வெற்றி பெற்று நகரம் திரும்பிய போது நாட்டின் மக்கள் அவர்களை வரவேற்கும்
விதமாக தீபம் ஏற்றி கொண்டாடியதாகவும் கூறப்படுகிறது.
சமண
மதத்தின் படி பீகார் மாநிலத்தில் கி.மு 599 இல் பிறந்தவ தான் மகாவீரர்.
இவர் பிறந்த நாள் மகாவீரர் ஜெயந்தியாக கொண்டாடப்படுவதைப் போல் முக்தி
அடைந்த நாளை தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.
மாமன்னர்
அசோகர் புத்த மதத்தை தழுவிய நாள் தீபாவளி ஆக சொல்லப்படுகிறது. அதனை நினைவு
கூறும் விதமாக புத்த மதத்தினரும் தீபாவளியை கொண்டாடுகின்றனர்.
அத்தகைய சிறப்பு பெற்ற தீபாவளி தினத்தில் அனைத்து மக்களின் வாழ்வில் ஒளி ஏற்றம் பெற பிரார்த்திக்கின்றோம்.
வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா
காரைதீவு