சேவையிலிருந்து விலகிய மருத்துவர்களிடமிருந்து அரசுக்கு ரூ. 1,2227 மில். நிலுவை உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .

 


சேவையிலிருந்து விலகிச் சென்றுள்ள அரசாங்க மருத்துவ அதிகாரிகளிடமிருந்து, 1,277 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணம் அரசாங்கத்துக்கு வரவேண்டிய நிலுவையில் உள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.

2015 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு இறுதி வரை மொத்தம் 705 மருத்துவர்கள் குறித்த ஒப்பந்தத்தை மீறியுள்ளமையும் இந்த கணக்காய்வில், தெரிய வந்துள்ளது. பதவிகளை விட்டு விலகிய மருத்துவ அதிகாரிகளிடமிருந்து, 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் 31 ஆம் திகதிக்கு அரசினால் அறவிடப்பட வேண்டிய பிணை முறி, தண்டப் பணம் மற்றும் கடன் முன்பண நிலுவைகள் ஆகியவற்றின் மொத்தத் தொகை 1,277 மில்லியன் ரூபாவாகும் என்றும் அந்த அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது. சேவையை விட்டு விலகிய மருத்துவ அதிகாரிகளிடமிருந்து அரசாங்கத்திற்குச் சேர வேண்டிய நிலுவைகள் மற்றும் வெளிநாட்டுப் பயிற்சி பெற்ற விசேட மருத்துவ அதிகாரிகளை நியமிப்பது தொடர்பான விசேட கணக்காய்வு அறிக்கை மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. தற்போது, முதுகலை பட்டப்படிப்பு பயிற்சிக்காகவும், வெளிநாடுகளில் தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொள்வதற்காகவும் மற்றும் ஏனைய காரணங்களுக்காகவும் வெளிநாடு செல்லும் மருத்துவ அதிகாரிகள், சேவையை விட்டு விலகுவது மற்றும் சேவையை கைவிடுவதாலேயே,இந்த நிலுவைகள் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், இந்த அதிகாரிகள் பிணை முறி மற்றும் தண்டப் பணத்தை செலுத்தாமலிருக்கும் நிலை, அதிகரித்துள்ளதாகவும் அவற்றை அறவிடுவதற்கான நடவடிக்கைகளில் பல பலவீனங்கள் இருப்பதாகவும் கணக்காய்வு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.