மட்டக்களப்பில் மாம்பழம் ஒன்றின் விலை இரண்டரை இலட்சம் ரூபாய் .

 


மட்டக்களப்பில் ஆலயம் ஒன்றில் மாம்பழம் ஒன்று இரண்டரை இலட்சம் ரூபாவுக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக மதிப்பில் ஏலம்போன மாம்பழமாக இது காணப்படுகின்றது.

மட்டக்களப்பு தேற்றாத்தீவு பால்மணல்மேடு அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் ஆலய வருடாந்த உற்சவம் நடைபெற்றுவரும் நிலையில் நேற்று மாலை மாம்பழத்திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

ஆலயத்தில் விசேட வழிபாடுகளை தொடர்ந்து வசந்த மண்டப பூஜை நடைபெற்று சுவாமி உள்வீதியுலா வந்ததை தொடர்ந்து, வெளிவீதியுலா நடைபெற்றதுடன் அங்கு மாம்பழ திருவிழா நடைபெற்றது.

முருகப்பெருமானும் பிள்ளையாரும் மாம்பழத்தினைப் பெறுவதற்காக மேற்கொண்ட செயற்பாடுகளையும் தாய் தந்தையர்களே உலகம் என்பதை வெளிப்படுத்தும் வகையிலும் இந்த திருவிழா நடாத்தப்படுகின்றது.

இதன்போது  மாம்பழம் ஆலயத்தில் ஏலத்திற்கு விடப்பட்டபோது சுமார் இரண்டரை இலட்சம் ரூபா ஏலத்தொகையினைக்கொண்டு இளையதம்பி தவாகரன் என்ற அடியார் மாம்பழத்தினை வாங்கிக்கொண்டார்.