புதையலுக்கு ஆசைப்பட்டு அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்ட குழுவினர் அதிரடியாக கைது .

 


நாட்டின் இருவேறு இடங்களில் புதையல் தோண்டும் நோக்கில் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்ட குழுவினரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கலேவெல மற்றும் பண்டாரதுவ ஆகிய பகுதிகளில் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டவர்களே இவ்வாறு கைதாகினர்.

கலேவெல பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கலேவெல பொலிஸ் பிரிவின் மாதிபொல பகுதியில் நேற்று (14) மாலை முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது, ​​புதையல் தோண்டும் நோக்கில் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்ட 07 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அதே நேரத்தில், அகழ்வு நடவடிக்கைக்காக அவர்கள் பயன்படுத்திய பல உபகரணங்கள் மற்றும் பூஜைப் பொருட்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மாதிபொல, வெலிகந்த, மில்லவான, தம்மின்ன மற்றும் தெஹியத்தகண்டிய பிரதேசங்களைச் சேர்ந்த 28-58 வயதுக்குட்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

இதற்கிடையில், பண்டாரதுவ பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று மாலை பண்டாரதுவ பொலிஸ் பிரிவின் நவகிரியாவ பகுதியில் சோதனை நடத்தப்பட்டது.

இதன்போது புதையல் தோண்டும் நோக்கில் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர், அகழ்வுக்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் மற்றும் பூஜைப் பொருட்களுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

63 வயதான சந்தேக நபர், நவகிரியாவ, கோனாகொல்ல பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், மொரகொட பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், மொரகொட பொலிஸ் பிரிவின் ஹல்மில்லேவ பகுதியில் நேற்று காலை சோதனை நடத்தப்பட்டது.

இதன்போது இரண்டு தந்தங்களை வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

46 வயதான சந்தேகநபர், நாமல்புர, கலேன்பிந்துனுவெவ பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.