புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை வரைவு செய்வது தொடர்பில் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் இறுதி வரைவு இந்த வாரத்துக்குள், நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு கையளிக்கப்படவுள்ளதாக அந்த குழுவின் தலைவர், ஜனாதிபதி சட்டத்தரணி ரியென்சி அர்சகுலரத்ன தெரிவித்துள்ளார்.
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை வரைவுசெய்வது தொடர்பில் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட குழு, கடந்த வாரம் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சில் கூடியது.
இதன்போது அங்கு கருத்து தெரிவிக்கையிலேயே குழுவின் தலைவர் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.
புதிய சட்டமூலத்தில் இடம்பெறும் பிரச்சினைக்குரிய இடங்களைத் தொடர்ந்தும் இனங்கண்டு, சட்டமூலத்தை இரண்டாவது தடவையாக ஆராயும் நடவடிக்கை இடம்பெற்று வருகிறது.
சட்டமூலம் தொடர்பில் குழு தொடர்ந்து கலந்துரையாடி வருவதுடன், மாற்றங்களை உள்வாங்கிக்கொண்டு சட்டமூலத்தை வரைவு செய்யும் நடவடிக்கையை, சட்ட வரைவு திணைக்களத்தினால் முன்னெடுத்துச் செல்வதாகவும் குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.