நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை நீக்குவதற்கான சட்டமும் விரைவில் நிறைவேற்றப்படும்.

 


ஜனாதிபதிகளுக்குரிய சிறப்புரிமைகளை நீக்குவதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளமை போன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை நீக்குவதற்கான சட்டமும் விரைவில் நிறைவேற்றப்படும் என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ  தெரிவித்துள்ளார்.

பலப்பிட்டியவில் நடந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், “பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கான கொள்கைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அதற்கமைய, தேசிய வரி வருமான திணைக்களம், மதுவரி திணைக்களம், சுங்க திணைக்களம் உள்ளிட்டவை தமக்கான இலக்கிற்கு அப்பால் இலாபமீட்டியுள்ளன.

 மறுபுறம் அநாவசிய செலவுகளை குறைத்திருக்கின்றோம். இவற்றின் ஊடாக வரவு – செலவு திட்டத்தின் இடைவெளியை படிப்படியாக சமநிலைப்படுத்த முயற்சிக்கின்றோம்.

உலகின் பல நாடுகள் பொருளாதார வளர்ச்சியைக் காண்பிக்க தவறியுள்ள போதிலும், இலங்கை அதனை செய்து காண்பித்துள்ளதாக உலக வங்கி பாராட்டு தெரிவித்துள்ளது.

2021, 2022, 2023ஆம் ஆண்டுகளில் வங்குரோத்து அடைந்திருந்த நாடு இன்று இந்நிலைமையை அடைந்துள்ளது. வருமானம் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு செலவுகள் குறைக்கப்பட்டுள்ளன.