கிழக்கில் குரங்குகளின் தொல்லையால் கடும் சிரமங்களை எதிர்நோக்கும் பொதுமக்கள்!

 


அம்பாறை மாவட்டத்தில்  குரங்குகளின் தொல்லையால் நகர வர்த்தகர்கள், விவசாயிகள், பாதசாரிகள் பெரும் சிரமங்களை தினம் தோறும் முகம் கொடுத்து வருவதாக  கவலை தெரிவிக்கின்றனர்.

தினமும் கொத்தணியாக 300 இற்கும் மேற்பட்ட குரங்குகள் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும்  நடமாடி வருவதுடன் இவ்வாறு  அதிகரித்து வருகின்ற  குரங்குகளின் தொல்லையை கட்டுப்படுத்த உரிய  அதிகாரிகள்  எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டும் பொதுமக்களினால்  முன்வைக்கப்பட்டுள்ளது.

சவளக்கடை, நாவிதன்வெளி, நற்பிட்டிமுனை, மருதமுனை, சேனைக்குடியிருப்பு, மணல்சேனை, பாண்டிருப்பு , பெரியநீலாவணை, மத்தியமுகாம், சொறிக்கல்முனை, சம்மாந்துறை, நிந்தவூர், அட்டாளைச்சேனை, அட்டப்பளம், ஒலுவில், வளத்தாபிட்டி, அக்கரைப்பற்று, தம்பிலுவில், பொத்துவில், இறக்காமம் பகுதிகளில்  உள்ள விவசாய நிலங்களில்  விதைப்பு மேற்கொள்ளப்பட்ட நெற்களை சேதப்படுத்துவதும், வியாபார கடைகளில் காட்சிபடுத்தபட்டுள்ள பொருட்களை நாசப்படுத்தி விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள பழங்களை உண்டு வீணாக்குவதாகவும் குற்றச்சாட்டுக்கள் அடுக்கடுக்காக முன்வைக்கப்படுகின்றன.

இது தவிர வீதிகளில் செல்கின்ற பாதசாரிகள் வாகனங்களின் போக்குவரத்தினை குரங்கு கூட்டங்களாக வீதியின் நடுவில் சஞ்சாரம் செய்து தடுத்து வருகின்றன.

இதனால் பல விபத்துக்களும் ஏற்பட்டுள்ளன. மேலும் இப்பிரதேச மக்கள்  பொருட்களை எடுத்துசெல்லும் போது கைகளில் உள்ள உணவு பொதிகளை பிடுங்குவதாகவும் இதன் காரணமாக இப்பகுதி மக்கள்   பல இடர்களை சந்திக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதே வேளை  குரங்குகளின் அட்டகாசத்தால் பல பகுதிகளில் உள்ள  மாணவர்கள் பல சிரமங்களுக்கு மத்தியில் கல்விகளை தொடர்ந்து வருகின்றனர்.

அத்தோடு வீடுகளில் உடைகளை வெளியில் உலரவிடும் சந்தர்ப்பத்தில் குரங்குகள் அவற்றை கொண்டுசெல்வதால் பாடசாலை மாணவர்கள் உட்பட வீட்டில் உள்ள பெரியவர்களும் பல பிரச்சினைகளை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு  அதிகரித்து வருகின்ற  குரங்குகளின் தொல்லையை கட்டுப்படுத்த உரிய  அதிகாரிகள்   நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.