வாழைச்சேனையைச் சேர்ந்த பல்துறைக் கலைஞர். கலாபூஷணம் ஹெட்டி ஆராச்சி மெத்தியேஸ் (எச்.மெத்தியேஸ்) அவர்களின் “சிறுகதைத் தொகுப்பு வெளியீடு வாழைச்சேனை இந்துக்கல்லூரி தேசியப் பாடசாலையில் நடைபெற்றது.











 
 வாழைச்சேனையைச் சேர்ந்த பல்துறைக் கலைஞர். கலாபூஷணம் ஹெட்டி ஆராச்சி மெத்தியேஸ் (எச்.மெத்தியேஸ்) அவர்களின் “சிறுகதைத் தொகுப்பு வெளியீடு  வாழைச்சேனை இந்துக்கல்லூரி தேசியப் பாடசாலை மண்டபத்தில் விமரிசையாக நடைபெற்றது.

  நூலின் வெளியீட்டாளரான யோ.றொஷ்மன்  தலைமையில் நடைபெற்ற விழாவில் வாழைச்சேனை பிரதேசத்தின் உதவிப்பிரதேச செயலாளர் திருமதி. டிலக்சினி சசிதரன், பிரதேசத்தின் கலைஞர்கள், எழுத்தாளர்கள், சமூக சேவகர்கள், வாசகர்கள், எழுத்தாளரின் குடும்பத்தினர் எனப்பலர் கலந்து கொண்டனர். 

  அதிதிகள் மலர்மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்று விழாமண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து விழாச்சுடர் ஏற்றும் நிகழ்வு இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து, அண்மையில் மறைந்த வாழைச்சேனை இந்துக்கல்லூரியின் அதிபர் அமரர்.அ.ஜெயஜீவன் மற்றும் கல்லூரியின் முன்னாள் அதிபர். அமரர்.மு. தவராஜா மற்றும் வாழைச்சேனை பிரதேசத்தின் கல்வி, கலை, இலக்கிய வளர்ச்சிக்காய் பங்களிப்பு செய்த அமரர்களுக்கு மௌன அஞ்சலி நிகழ்த்தப்பட்டது. 

தொடர்ந்து செல்வி. பிரணவாஸனா சுஜிதலால்  தமிழ்மொழி வாழ்த்தும், செல்வி. கிறிஸ்மிதா சுஜீக்காந்  வரவேற்பு நடனமும் இடம்பெற்றன. அதிதிகள் முன்னிலையில், எழுத்தாளர் எச்.மெத்தியேஸ் தனது கரங்களால் நூலின் முதல் பிரதியினை பிரதம அதிதிக்கு வழங்கி நூலினை வெளியிட்டு வைத்தார். அதனைத்தொடர்ந்து விழாவில் கலந்து கொண்ட அதிதிகள் அனைவருக்கும் எழுத்தாளரும், பிரதம அதிதியும் இணைந்து நூல் பிரதிகளை வழங்கி வைத்தனர்.

 கல்குடா வலயக்கல்வி அலுவலகத்தில் ஆசிரிய ஆலோசகரும் எழுத்தாளருமான எ.த.ஜெயரஞ்சித் நூலுக்கு அவையோர் நயவுரையினை வழங்கி அவையினை மகிழ்வித்தார். இரா.மணி  சிறப்புரை  நிகழ்த்தினார். கவிஞர்.வில்சன் சுதாகர் எழுத்தாளரையும் நூலையும் வாழ்த்தினார். 

 பிரதம அதிதியாக கலந்து கொண்ட உதவிப்பிரதேச செயலாளர் திருமதி. டிலக்சினி சசிதரன்  “அழகாகவும் அற்புதமாகவும் நிகழ்ந்த இந்த விழாவில் கலந்து கொண்டமைக்காக தனது மகிழ்ச்சியினையும், 79 வயது தாண்டிய நிலையில் தனது 50 ஆண்டு கால எழுத்துலக வாழ்வின் அறுவடையாய் இந்த நூலினை இன்று வெளியிடுகின்ற எழுத்தாளருக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

 இறுதியாக, எழுத்தாளர் எச்.மெத்தியேஸ்  ஏற்புரை வழங்கினார். “விழாவுக்கு வருகை தந்தவர்களுக்கும், தனது கலை, இலக்கியப் பயணத்தில் தன்னை ஊக்குவித்து வளர்த்து விட்டவர்களுக்கும், இந்த புத்தக வெளியீட்டினை நடத்துகின்ற விழாக் குழுவினருக்கும் தனக்கு பக்கபலமாய் விளங்கும் குடும்பத்தினருக்கும் நன்றிகளைத் தெரிவித்தார். 

   புதுக்குடியிருப்பு “பாரதி சமூக, கலை, இலக்கிய மேம்பாட்டுக் கழகத்தினரும், பேத்தாழை “விபுலானந்தர் கலை, இலக்கிய மன்றத்தினரும் இணைந்து எழுத்தாளருக்கு பொன்னாடை போர்த்தி, நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தனர். கவிதாயினி சுஜிபொற்செல்வி  எழுத்தாளருக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்துக் கவிதை பாடி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தார். தொடர்ந்து, எழுத்தாளரின் குடும்பத்தினர் சார்பாக பொன்னாடைகள் அணிவிக்கப்பட்டு எழுத்தாளர் கௌரவிக்கப்பட்டார். எழுத்தாளர் தனது கரங்களால் விழாவில் கலந்து சிறப்பித்த அதிதிகளுக்கு பொன்னாடை அணிவித்துச் சிறப்பித்தார். 

  1946இல் கிரானில் பிறந்த ஹெட்டி ஆராச்சி மெத்தியேஸ் அவர்கள் தன்னுடைய 20 வயது முதல் கலை, இலக்கியத்துறையில் இயங்கி வருகின்றார். சிறுவயதில் இளம்பிள்ளைவாத நோயினால் பாதிக்கப்பட்டு, ஒரு கால் நடக்க முடியாது போனாலும், தனது தன்னம்பிக்கை விடாமுயற்சியினால் பிரதேசத்தின் மாபெரும் கலைஞராக உயர்ந்து நிற்கின்றார். கவிதை,  ஓவியம், மேடை நாடகம், பேச்சு, சிறுகதை, கட்டுரை என பல்வேறு துறைகளில் தனது ஆளுமையினை வெளிப்படுத்தியுள்ள இவருக்கு 2010ஆம் வருடம் இலங்கை அரசினால் வழங்கப்படும் உயரிய விருதான “கலாபூஷணம்“ விருது வழங்கப்பட்டது. பேத்தாழை பொதுநூலகமும் விபுலானந்தர் கலை இலக்கிய மன்றமும் இணைந்து இவருக்கு “முத்தமிழ் கலைஞர்” எனும் விருதினை அண்மையில் வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.

 

  ந.குகதர்சன்