மட்டக்களப்பில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

 


மட்டக்களப்பில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

 காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் மட்டக்களப்பு பிராந்திய  அலுவலகத்தின் ஏற்பாட்டில் ஏறாவூர்ப்பற்று செங்கலடி - பிரதேச செயலகத்தில்  குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. 

வாழைச்சேனை, கிரான், வாகரை , செங்கலடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் 35 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. 

அதில் 33 பேர் விசாரணைக்காக சென்ற நிலையில் அவர்களிடம்  விசாரணைகள் இடம்பெற்றன.

காணமற்போன ஆட்களின் உறவினர்களினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளை காணாமற்போன ஆட்கள் பற்றிய கொழும்பு பிராந்திய அலுவலகத்தில் இருந்து வருகை தந்த வடிவேல் கிருஷ்ணமூர்த்தி மற்றும் தம்பிஐயா யோகராஜா ஆகியோர் தலைமையிலான அலுவலக உத்தியோகத்தர்கள்  முன்னெடுத்தனர்.

இதேபோன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திலும் இன்றைய தினம் காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.