மட்டக்களப்பு வந்தாறுமூலை வளாகத்தில் தொழில்நுட்ப பீட மாணவர்கள் மீது பகிடிவதை மேற்கொண்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 16 மாணவகளுக்கு பிணை.

 

குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட, கிழக்கு பல்கலைக்கழகத்தின் 16 மாணவர்களையும் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 
 

 
 
ஏறாவூர் நீதிவான் முன்னிலையில் மாணவர்கள் 16 பேரும் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, பிணை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 
 
அதற்கமைய, தலா இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் செல்ல குறித்த மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
 
அத்துடன், தினமும் மாலை 05 மணிக்கும் 06 மணிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் ஏறாவூர் காவல்நிலையத்துக்கு சென்று கையொப்பமிட வேண்டும் எனவும் நீதிவான் அவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். 
 
அத்துடன் இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 
 
முன்னதாக, கிழக்கு பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு வந்தாறுமூலை வளாகத்தில் தொழில்நுட்ப பீட மாணவர்கள் மீது பகிடிவதை மேற்கொண்டமை தொடர்பில் குறித்த 16 மாணவர்களும் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். 
 
கைது செய்யப்பட்டவர்களில் 07 மாணவிகளும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.