"சிறுவர்களுக்கான
பாதுகாப்பு சூழலை உருவாக்குதல்' என்ற தொனிப் பொருளில் மெதடிஸ்த திருச்சபை
கல்முனை சேகரத்தின் பெரியநீலாவணை அற்கின்ஸ் சிறுவர் அபிவிருத்தி
திட்டத்தினால் சிறுவர் பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு
அமைதிப் பேரணி நேற்று (28) வியாழக்கிழமை நடைபெற்றது.
இப்பிரதேசத்தில்
வாழும் பிள்ளைகள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பான பிரசாரத்துடன் இப்
பேரணி பெரியநீலாவணை மெதடிஸ்த திருச்சபையில் இருந்து ஆரம்பமாகி
மாடித்தொகுதியினூடாகச் சென்றது.
பின்னர் பிரதான வீதியில் அமைக்கப்பட்ட பஸ் தரிப்பு நிலையம் அருட்திரு ரவி முருகுப்பிள்ளை அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
பின்னர் மீண்டும் ஆலய முன்றலை
வந்தடைந்தது.அங்கு
கூடியிருந்த மக்களிடையே சிறுவர்களை பாதுகாப்பது தொடர்பான விசேட உரைகளை
கல்முனை மெதடிஸ்த திருச்சபையின் அருட்திரு ரவி முருகுப்பிள்ளை, ஓய்வு நிலை
அதிபர் வி.பிரபாகரன், திட்டத்தின் ஊழியர் லியோ பிரசாந், சிறுவர்
அபிவிருத்தி திட்ட முகாமையாளர் திருமதி சுவர்ணகலா, ஆகியோர்
நிகழ்த்தினர்.பேரணியில் கலந்து கொண்டவர்கள் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான
பல்வேறுபட்ட வாசகங்கள் எழுதிய பதாதைகளை கையில் ஏந்தியிருந்தனர்.
பிள்ளைகள்
எதிர்நோக்கும் சவால்கள் ,இடை விலகல்கள் ,பாதுகாப்பின்மை ஏற்படுதல்,
சிறுவர் துஸ்பிரயோகம் புறக்கணிப்பு,கவனிப்பின்மையால் சுயத்தை இழக்க நேரிடல்
என பல்வேறு பாதிப்புக்களை சிறுவர்கள் எதிர்நோக்குவதாக இதன்போது மக்களிடையே
எடுத்துக் கூறப்பட்டது.
குறித்த
நிகழ்வில் மேலும் அருட்செல்வி ஏ.சுலோஜினி கல்முனை YMCA யின் செயலாளர்,
ஜே.பத்தலோமியஸ் மற்றும் திட்டத்தின் உத்தியோகத்தர்கள் நிருவாகக் குழுவின்
உறுப்பினர்கள் பெற்றோர்கள் நலன் விரும்பிகள் எனப் பலரும்
பங்குபற்றியிருந்தனர்.பஸ் தரிப்பு நிலையம் அமைக்கப்பட்டமை அப்பிரதேச
மக்களின் நீண்ட கால தேவையாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
(வி.ரி.சகாதேவராஜா)
















