நாடாளுமன்ற உறுப்பினர்களின்
ஓய்வூதியம் ரத்து செய்யப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து
ஓய்வுபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டமைப்பு ஆலோசித்து வருவதாகத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டமைப்பின் செயலாளர் பிரேமசிறி மானகே இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் குறித்த விவகாரம் தொடர்பாக
சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியம் மற்றும் ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின்
மனித உரிமைகள் ஆணையகத்திடம் முறையிடவுள்ளதாகவும் மானகே
குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான
ஓய்வூதியத்தை ரத்து செய்வதற்கும், முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது
குடும்பத்தினருக்கான சிறப்பு உரிமைகளை ரத்து செய்வதற்குமான ஒரு சட்ட மூல
வரைவுக்கு அமைச்சரவை கடந்த மாதம் அங்கீகரித்த நிலையிலேயே
இந்தக்கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.