மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபை ஆட்சி அமைப்பதற்கு தமிழரசுக்கட்சிக்கு ஆதரவளித்ததாக என் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டினை மறுக்கிறேன்- பிரதேசசபையின் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி உறுப்பினர் த.சுதாகரன்

 

 

 

 

 

 

 


 

கட்சிக்கும் கட்சியின் தலைமைக்கும் என்றும் தான் விசுவாசமாக செயற்பட்டுவருவதாகவும் ஆனால் சிலர் தன்னை பணம்பெற்றுக்கொண்டு கட்சி முடிவுக்கு எதிராக செயற்பட்டதாக தெரிவித்துவரும் கருத்துகளை முற்றாக மறுப்பதாக மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையின் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி உறுப்பினர் த.சுதாகரன் தெரிவித்தார்.

நேற்று (13) மாலை மட்டு ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
அண்மையில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபை ஆட்சி அமைக்கும் போது நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பின்போது தான் தமிழரசுக்கட்சி உறுப்பினருக்கு ஆதரவளித்ததாக தன்மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டினை முற்றுமுழுதாக மறுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


தவிசாளர் தெரிவின்போதும், நடைபெற்ற அசாதாரண நிலைமையின்போதும், ஏற்பட்ட நெருக்கடிகளின்போதும் நடைபெற்ற சம்பவங்களைக்கொண்டு தன்மீது சேறுபூசும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் இதனை முற்றாக மறுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இன்றைய தினம் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி தலைமை காரியாலயத்தில் நடைபெற்ற தலைவர் பணிக்குழுவின் விசாரணையின்போது நடந்தவற்றை கூறியுள்ளதாகவும் தான் ஒருபோதும் கட்சிக்கு எதிராக செயற்படமாட்டேன் என்பது உறுதிபட தெரிவித்துள்ளதாகவும் உறுப்பினர் இதன்போது தெரிவித்தார்.