தமிழ் மன்னர்களின் வரலாற்றினையும் பாடப் புத்தகத்தில் சேர்க்க வேண்டும்

 


நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற கல்வி மறுசீரமைப்பு விவாதத்தில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர். இ.சிறிநாத் அவர்கள், தேசிய பாடசாலைகளுக்கு வழங்கப்படும் வளப்பகிர்வுகள் அதே அளவு சமமாக மாகாணப் பாடசாலைகளுக்கும் வழங்கப்பட வேண்டும்.

இவ்வாறு மாகாணப் பாடசாலைகளுக்கு வழங்குவதன் மூலமே குறிப்பிட்ட பிரதேசத்தின் தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் பாகுபாடு அற்ற தன்மைகள் காணப்படும் என்றும் அவ்வாறான செயற்பாடு மூலமே சமச்சீரான கல்வி மாணவர்களுக்கு கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.

இவ்வாறு மாகாண சபைகளுக்கு போதியளவு வளப்பகிர்வு வழங்கப்பட வேண்டும் என்றால் மாகாண சபைத் தேர்தலும், அதற்கான அதிகாரங்களும் பகிரப்பட வேண்டும் என்றும் அதைத் தவிர குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாண சபைகளுக்கு அரசியல் அமைப்பின் ஊடாக அதிகூடிய அதிகாரங்கள் வழங்கப்படுவதன் மூலம் எமது பிராந்தியத்தில் உள்ள சகல மாகாணப் பாடசாலைகளிற்குரிய கல்வி நடவடிக்கைகள் சீரமைக்கப்படும் என்றும் தெரிவித்த அவர் வேலையில்லாப்பட்டதாரிகளின் பிரச்சினைகள் சம்பந்தமாகவும் கவனம் செலுத்தினார்.

இதைத் தவிர குறிப்பாக கடந்த காலங்களில் எமது மாணவர்களுக்கு கிடைக்கப்பெற்ற வரலாற்றுப் பாடப்புத்தகத்தில் தமிழ் மன்னர்களுடைய வரலாறுகள் பறிக்கப்பட்டதையும் எடுத்துக்கூறிய அவர் எதிர்காலத்தில் வரலாற்றுப் பாடங்களில்
எமது தமிழ் மன்னர்களின் வரலாற்றினையும் பாடப் புத்தகத்தில் சேர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தி இருந்தார்.