வடக்கு-கிழக்கு இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை கோரி கிறிஸ்தவ ஒன்றியதால் மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு .

 


வடக்கு - கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட இனப்படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என்று கோரி மட்டக்களப்பில் கவனயீர்ப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

கறுப்பு ஜூலை இனப்படுகொலையை நினைவுகூர்ந்து மட்டக்களப்பு காந்தி பூங்காவில் மட்டக்களப்பு கிறிஸ்தவ ஒன்றியத்தினரால் குறித்த கவனயீர்ப்பு முன்னெடுக்கப்பட்டது. 

இதன்போது கறுப்பு ஜூலை ஸ்ரீலங்கா அரச பயங்கரவாதத்தின் கொடூரம், செம்மணி புதைகுழிக்கு சர்வதேச விசாரணை வேண்டும், தமிழர் தாயகத்தில் இலங்கை அரசாங்கத்தால் நிகழ்த்தப்பட்ட மனித புதைகுழிகளுக்கு சர்வதேச நீதி வேண்டும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டும் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பி கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

மேலும் சர்வதேச நீதிப்பொறிமுறையின் கீழ் வடக்கு - கிழக்கில் நிகழ்ந்தேறிய இனப்படுகொலைகள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

கவனயீர்ப்பில்  மட்டக்களப்பு மாவட்ட கிறிஸ்தவ ஒன்றியத்தின் அருட்தந்தையர்கள், மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள் மற்றும் சிவில் சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.