தகாத உறவால் வந்த விபரீதம் , 39 வயதான மூன்று பிள்ளைகளின் தாயொருவர் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார் .

 


நாவலப்பிட்டிய – இம்புல்பிட்டிய தோட்டத்திலுள்ள பாழடைந்த பங்களாவுக்குள் பெண்ணொருவரின் கழுத்தை அறுத்து படுகொலை செய்த நபர் கம்பளை பொலிஸில் நேற்று செவ்வாய்க்கிழமை (22) சரணடைந்துள்ளார்.

நாவலப்பிட்டிய, இம்புல்பிட்டிய தோட்டத்தை சேர்ந்த 39 வயதான மூன்று பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்ட பெண் சந்தேக நபருடன், கம்பளை, புசல்லாவை பகுதியில் 9 மாதங்களாக வசித்து வந்துள்ளார் எனவும், கடந்த 22 ஆம் திகதி தனது சட்டப்பூர்வ கணவரின் வீட்டுக்கு சென்றுள்ளார் எனவும், அங்கிருந்து மேற்படி நபருடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பெண் வீட்டு வேலைக்காக வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்தார், அதற்கு சந்தேக நபர் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வந்தார் எனவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேற்படி பெண்ணுக்கு அழைப்பை ஏற்படுத்திய சந்தேக நபர் கடந்த 22 ஆம் திகதி பாழடைந்த பங்களாவுக்கு அவரை அழைத்துள்ளார்.

அவ்வாறு சென்றவேளையிலேயே கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.

குறித்த கொலையை செய்த நபர் பொலிஸில் சரணடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் நாவலப்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.