இஸ்ரேல் இராணுவம் ஈரானின் அணு ஆயுதத் திட்டத்தை அழிக்க ஒரு வாரத்தில் வெற்றி பெறும், இஸ்ரேல் இராணுவம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ அறிக்கை.

 

 


இஸ்ரேல் இராணுவம் ஈரானின் அணு ஆயுதத் திட்டத்தை அழிக்க ஒரு வாரத்தில் வெற்றி பெறும் என மதிப்பீடு செய்துள்ளோம் என
இஸ்ரேல் இராணுவம் அறிவிப்பு.

ஈரானின் அணு ஆயுதத் திட்டம் மற்றும் ஏவுகணைத் திறன்களை அழிப்பதற்காக தொடங்கிய நடவடிக்கையில், ஒரு வாரம் அல்லது இரண்டு வாரங்களுக்குள் தனது இலக்குகளை அடையும் என மதிப்பிட்டுள்ளது.


இஸ்ரேல் இதுவரை ஈரானின் இரண்டு முக்கிய அணு ஆயுத செறிவூட்டல் மையங்களான நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹானை குண்டுவீசி கடுமையாக சேதப்படுத்தியுள்ளது.

மேலும், அணு ஆயுதத் தயாரிப்பில் ஈடுபட்டிருந்த ஒன்பது முக்கிய விஞ்ஞானிகளை கொன்று, ஈரானின் அணு ஆயுதத் திட்டத்தை ஆதரிக்கும் பல அலுவலகங்கள் மற்றும் கட்டளை மையங்களையும் தாக்கியுள்ளது.


இஸ்ரேல் இராணுவம், ஈரானின் ஆழமான நிலத்தடி அணு மையமான ஃபோர்டோவை இதுவரை தாக்கவில்லை என்று மறுத்தாலும், அது தங்கள் “இலக்கு வங்கியில்” உள்ளதாகக் கூறியுள்ளது. பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், ஃபோர்டோ குறித்து “நிச்சயமாக கவனிக்கப்படும்” என்று தெரிவித்தார்.


ஈரானின் ஏவுகணைத் திறன்களைப் பொறுத்தவரை, இஸ்ரேல் இதுவரை ஈரானின் 40% ஏவுகணை ஏவுதளங்களை, அதாவது சுமார் 200 ஏவுதளங்களை அழித்து அல்லது செயலிழக்கச் செய்துள்ளது. இது கடந்த இரு நாட்களாக ஈரான் இஸ்ரேல் மீது நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்துள்ளது.


ஈரானின் இராணுவத்தைப் பொறுத்தவரை, இஸ்ரேல் பல டஜன் தளபதிகளை, குறிப்பாக இஸ்லாமியப் புரட்சிக் காவல்படை மற்றும் ஈரான் ஆயுதப் படைகளின் முக்கிய தலைவர்களில் பெரும்பாலானோரைக் கொன்றுள்ளது.

திட்டமிடப்பட்டதை விட மூன்று மடங்கு அதிகமான தளபதிகளை இஸ்ரேல் கொன்றுள்ளதாக இராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நடவடிக்கை பல மாதங்களுக்கு முன்பே திட்டமிடப்பட்டது.

ஈரானின் வான்பாதுகாப்பு அமைப்புகளை மீறுவது மிகப்பெரிய சவாலாக இருந்ததாகவும், தற்போது இஸ்ரேல் மேற்கு ஈரான் மற்றும் தெஹ்ரான் மீது வான்வெளி ஆதிக்கத்தைப் பெற்றுள்ளதாகவும் இராணுவ அதிகாரிகள் கூறினர்.