அமெரிக்கா அணுசக்தி மையங்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு ஈரான் இழப்பீடு கோரியுள்ளது

 


அண்மையில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் தங்கள் நாட்டின் அணுசக்தி மையங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. இதற்கு உரிய இழப்பீட்டை அமெரிக்கா வழங்க வேண்டும் என்றும் இல்லையென்றால் ஐ.நாவில் புகார் அளிக்கப்படும் எனவும் ஈரான் கூறியுள்ளது.

கடந்த 21 ஆம் திகதி அன்று இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்க படைகள் தாக்குதலில் இறங்கின. அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதலில் ஈரானின் முக்கிய அணுசக்தி மையங்களான ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் உள்ளிட்டவை தாக்கப்பட்டன. இதை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்  ட்ரம்ப் உறுதி செய்திருந்தார்.

இந்நிலையில், ஈரானின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகி, அமெரிக்க தாக்குதலில் தங்கள் தேசத்தின் முக்கிய அணுசக்தி மையங்கள் மோசமாக சேதமடைந்துள்ளதாக தற்போது தெரிவித்துள்ளார். எங்கள் தேசத்தின் அணுசக்தி மையங்கள் மிக மோசமாக சேதமடைந்துள்ளன என அவர் உறுதி செய்தார்.

தாக்குதலில் எங்கள் தேசத்தின் அணுசக்தி மையங்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு அமெரிக்கா இழப்பீடு வழங்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் ஐ.நாவில் புகார் அளிக்க திட்டமிட்டுள்ளோம். போர்நிறுத்தம் தொடர்பாக எழுத்துபூர்வமான ஒப்பந்தம் எதுவும் இஸ்ரேல் உடன் மேற்கொள்ளப்படவில்லை. இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தி உள்ளது. அவ்வளவுதான்  என ஈரானின் வெளியுறவு துறையின் துணை அமைச்சர் சயீத் கதிப்சாதே லெபனானை சேர்ந்த ஊடக நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.