நடைபெறவுள்ள ஐ.நா கூட்டத் தொடரிலே தங்களுக்கான நீதிப் பொறிமுறை விடயங்களை வலியுறுத்துமாறு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிளிநொச்சியில் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஊடக சந்திப்பு இன்று(15) நடைபெற்றபோதே இந்த சங்கத்தின் தலைவி யோகராசா கலாறஞ்சினி இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், காணாமல் ஆக்கப்பட்ட தங்களது பிள்ளைகளுக்கு இன்று வரை நீதி கிடைக்கவில்லை.இந்த அரசும் அதற்கான நீதியை பெற்று தருவதற்கு இது இதுவரை ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவில்லை.
அம்பாறை- தம்பிலுவில் மத்திய சந்தை பகுதியில் இயங்கி வருகின்ற அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அலுவலகத்தை உடனடியாக அகற்றுமாறு அதன் தலைவிக்கு மக்களின் வாக்குகளை பெற்று தவிசாளராகிய சசிக்குமார் என்பவரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளைய தினம் காலை அம்பாறையில் போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.
இலங்கைக்கு விஜயம் செய்யும் ஐ.நா பிரதிநிதியிடம் காணமல் ஆக்கப்பட்ட உறவினர்களை சந்திப்பதோடு செம்மணிப்புதை குழி மற்றும் தொடுவாய் மன்னார் போன்ற புதைகுழிகளையும் பார்வையிட வேண்டும்.
மேலும், இது தொடர்பில் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளையும் முன்வைக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.