மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக சம்மேளனத்தின் புதிய தலைவராக மீண்டும் தேசபந்து மு.செல்வராசா தெரிவு!!

மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக சம்மேளனத்தின் புதிய தலைவராக மீண்டும் தேசபந்து முத்துக்குமார் செல்வராசா ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக சம்மேளனத்தின் விசேட பொதுக்கூட்டம் நேற்றைய தினம் (21) திகதி மட்டக்களப்பு ஈஸ்ட் லகூண் விடுதியில் இடம் பெற்ற போதே மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தின் தலைவரும் தொழிலதிபருமாகிய  தேசபந்து முத்துக்குமார் செல்வராசா மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக சம்மேளனத்தின் புதிய தலைவராக மீண்டும் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக சம்மேளனத்தின் முன்னால் தலைவராக தேசபந்து முத்துகுமார் செல்வராசா இருந்து வந்த நிலையிலேயே மீண்டும் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சம்மேளனமானது கடந்த 15 வருடங்களுக்கு மேலாக பல்வேறுபட்ட  தொழில் முயற்சியாளர்களின் மேம்பாட்டிற்காக செயற்பட்டு வந்திருந்ததுடன், சிறு தொழில் முயற்சியாளர்களை மேம்படுத்த இலகு கடன் வசதிகளையும் வழங்கி வந்துள்ளதுடன், பல்வேறுபட்ட விற்பனை கண்காட்சிகளை  சந்தைப்படுத்தல் மேம்பாட்டிற்காக ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது.

எதிர்வரும் காலத்தில் பல இளம் தொழிலதிபர்களை வளர்த்து விடுவதற்காக இந்த அமைப்பு செயற்படவுள்ளதுடன், தொழில் முனைவோர் மற்றும் வர்த்தகர்கள் குறித்த சம்மேளனத்தில் இணைந்து கொண்டு பயன்பெறலாம் என புதிய தலைவர் தனது தெரிவின் பின்னர் தெரிவித்திருந்தார்.

குறித்த சம்மேளனத்தின் செயலாளராக எந்திரி அன்டன் தம்பிமுத்து அவர்கள் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டதுடன், அமைப்பின் நிபுணராக தங்கவேல் சக்திவேல் அவர்கள் உள்ளிட்ட அமைப்பின் ஆலோசகர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

குறித்த கூட்டத்தில் பிரபல தொழிலதிபர்கள், வர்த்தகர்கள், மட்டு சுய தொழில் முயற்சியாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் உதயகாந்த் (JP) மற்றும் இளம் தொழில் முனைவோர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.