இலக்கிய வடிவங்களிலே ‘கவிதையை’ அரசி என்று கூறலாமா? கல்முனையில் உலகறிந்த எழுத்தாளர் உமாவரதராஜன் விளக்கம்!

 






இலக்கிய வடிவங்களிலே ‘கவிதையை’ அரசி எனக் கூறுவதுண்டு. என்னைப் பொறுத்த வரையில் இலக்கிய வடிவங்களில் யார் அரசி, எவர் ‘சேடிப் பெண்’ என்பதெல்லாம் முக்கியமில்லை. இலக்கியத்தின் எல்லா வடிவங்களுமே சிறப்பாக அமைவதற்குக்  கடுமையான உழைப்பும், கற்பனை வளமும், சிருஷ்டித் திறனும் தேவைப் படுகின்றன. 

இவ்வாறு கல்முனையில் நடைபெற்ற கவிதைக் தொகுப்பு நூல் வெளியீட்டு விழாவில் சிறப்புரையாற்றிய உலகறிந்த எழுத்தாளர் தமிழ்மணி உமாவரதராஜன் கூறுகிறார்.
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ” கிழக்கின் கவிக்கோர்வை” தொகுப்பு நூல் அறிமுக நிகழ்வு 10.06.2025 செவ்வாய்க்கிழமை இன்று காலை 9.00 மணிக்கு கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை நல்லதம்பி மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

பண்பாட்டலுவல்கள் திணைக்கள கிழக்கு மாகாணப் பணிப்பாளர் ச.நவநீதன்  தலைமையில் கடந்த செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்றது.

அந் நிகழ்வில் அவர் மேலும் தெரிவிக்கையில்..

கவிதை  என்றால்  என்ன  என்று  யாராலும் எளிதில் விளக்கி விட முடியாது. கவிதை என்பது என்ன என்பதற்கு திட்டவட்டமான வரையறைகளும்  கிடையாது. அவரவர் ரசனைக்கும் அனுபவங்களுக்கும் ஏற்ற வகையில் அவை புரிந்து கொள்ளப் படுகின்றன.
தாகூர்  என்ற மகாகவியின்  கவிதை இது.

புல்லின் மீதான
பனித்துளிகளைத்
தாவித்தாவி காவல் காக்கின்றன
வெட்டுக்கிளிகள்

அளவில் மிகவும் சிறிய கவிதை இது. ஆனால் இது கொண்டிருக்கும்  அர்த்தங்களும்,  பரிமாணங்களும் மிகவும் பெரியவை. வேண்டுமானால் கவிதை என்பதன் முக்கிய அம்சமாக அதன் நீட்டி முழக்காத சிக்கனத் தன்மையைக் குறிப்பிடலாம்.  
சிக்கனம் மட்டுமின்றி அது உருவாக்கும் மனக்காட்சிகளும் முக்கியம்.
குறுந் தொகையில் வரும் பாடலொன்றின் வரிகள் இவை. 


‘செம்புல பெயனீர்  போல
அன்புடை  நெஞ்சம்  தாங்  கலந்தனவோ ?'
இதில்  இடம்பெறும்  'பாலை  நிலத்தில் பெய்த  மழையைக் ' கற்பனை பண்ணி  ஒரு  மனச்சித்திரத்தை  அல்லது  காட்சியை  உருவாக்கிக்  தருவதில்தான் ஒரு கவிஞனின் தேர்ச்சி  இருக்கின்றது.
கவிதை என்பது எந்த வடிவத்தில் வெளிப்பட்டாலும் கூட நல்ல கவிதை  என்பது  மனதில்  காட்சிகளை  உருவாக்குவதாக இருக்க வேண்டும்.. இந்தப் பண்பை ஆங்கிலத்தில் images  என்று  கூறுவார்கள். 
தமிழ் கவிதை வரலாற்றில் சீரான  ஓசை என்பது ஆட்சி புரிந்த  ஒரு காலம் இருந்தது. ஆனால் அது படிப் படியாகத்  தன்  தளைகளை  உதறிக்  கொண்டு  சுதந்திரமான ,எளிமையான  உருவத்துக்கு இப்போது வந்து சேர்ந்து விட்டது. அதை மீண்டும் பழைய உருவத்துக்குக் கொண்டு போகலாம் என்ற எண்ணத்துடன் ஆங்காங்கே சில முயற்சிகள் நடக்கின்றன.  ஆனால் அவையெல்லாம் Parody ஆகவே துருத்திக் கொண்டு நிற்கும். 1950 களின் தியாகராஜ பாகவதரின் பாடல்களை இரண்டாயிரத்து இருபதுகளின் சித் ஸ்ரீராம் பாடுவது போலிருக்கும்.  
ஒருகாலத்தில் கவிதைகள் ஓசைநயத்தால் அளக்கப் பட்டன . பின்னொருகாலத்தில் கவிதையில் படிமங்கள் ,உருவகங்கள் என்பன இன்றியமையாதவை எனச் சொன்னார்கள். அதன் பின்னர் கவிதையின் இருண்மையான தன்மையையும் , வலிந்திழுத்த படிமங்களையும் கொண்டாடினார்கள். ஆனால் இந்த நிபந்தனைகளையெல்லாம் புறந்தள்ளியபடி , இரண்டாயிரமாண்டு பாரம்பரியம் கொண்ட தமிழ்க்கவிதை தன்னைப் புதுப்பித்த படி நகர்ந்து கொண்டேயிருக்கிறது.
சுமார் 2000 ஆண்டு காலத் தொடர்ச்சியைக் கொண்ட தமிழ்க் கவிதைகளின் பயணத்தின் பின்னணியில் வைத்தே நாம் இந்தத் தொகுப்பின் கவிதைகளைப் பார்க்க வேண்டும். இப்போதும் உயிரோடு இருக்கின்ற கவிஞர்கள்  ‘சுய விமர்சனம்’ செய்து கொள்ள வேண்டும். 
தாம் எழுதும் கவிதையில் காலம் பிரதிபலிக்கிறதா ? சமூகத்தின் சாயல் தென்படுகிறதா ? தங்கள் கவிதையில் பொதிந்திருக்கும் நுட்பங்கள் எவை ?  தமிழ்க் கவிதைகளில் காலாகாலமாகத் தென் படும் ‘தேய் வழக்கு ‘ அம்சங்களை இந்தக் கவிதைகள் உதறித் தள்ளி விட்டு ,மொழி ரீதியாகவும் சிந்தனை ரீதியாகவும்  புதியவற்றுக்கு இடமளித்திருக்கின்றனவா  என்ற அம்சங்களை ஓர் ஒப்பீட்டு நோக்குடன் கவனித்தால் அது அவர்களுக்குப் பயனளிக்கும். 
படைப்பாளி  ஒருவனின்  மனதில்  உந்துதல்  எதுவும் அற்று  வெளிப் படுவது ஒரு போதும் கவிதையாகாது.  அது தயாரிப்பு. 
இன்று அதை CHAT- GPT செய்து தந்து விடும். அல்லது செயற்கை நுண்ணறிவு ARTIFICIAL INTELEGENCE  தந்து விடும். அவை கவிதைகள் ஆகா. இந்த அசலுக்கும் நகலுக்குமிடையிலான போராட்டம் எப்போதும் இருந்து கொண்டேயிருக்கும்.
முக்கியமாக ஒரு கவிதையின்  விளைவு,  அதைப் படிக்கின்ற  ஒருவர்  மனதில்  சலனங்களை  ஏற்படுத்த வேண்டும். நெகிழ்ச்சியை, துயரத்தை, அன்பை, கோபத்தை ,காதலை, காமத்தை, பயத்தை ....இன்னோரன்ன உணர்வுகளைக் கிளற வேண்டும். அப்படி எவற்றையும் நிகழ்த்தாத  கவிதைகளை நாம் பொருட்படுத்த வேண்டிய அவசியமில்லை. 
இன்று நம் நாட்டார் மரபுகளையும்
தொன்மங்களையும் மிக அழகாகக் கவிதைகளில் பயன் படுத்துவோர் உள்ளனர். அரசியல் விமர்சனங்களை வெகு இயல்பான மொழியில் கையாள்பவர்கள் இருக்கின்றனர் .உணர்ச்சிக் கொந்தளிப்புகளை ,மனத் தத்தளிப்புகளை , எளிமையான மொழிக்குள் கொணர்பவர்கள் இன்றைக்கு இருக்கிறார்கள்.  எளிமையான சொல்லாடல்களிலும் சிறப்பான கவிதைகளைக் காணும் ஒரு காலகட்டத்தில் நாம் இன்று இருக்கிறோம்.  
இன்றைக்குக் கவிதை எழுதுகிறவர்கள்,  கவிதை எழுத வருகின்றவர்கள் கவிதையுலகில் நிகழ்ந்து கொண்டிருக்கும் மாற்றங்களைக் கணக்கிலெடுத்தால் நல்லது.  இல்லையென்றால் அவர்களைக் காலம் குப்பைக் கூடைக்குள் போட்டு விடும்.  
ஒரு பெருந்தொகுப்பு 332 கவிஞர்களுடன் 494 கவிதைகளுடன் வெளி வருவது மகிழ்ச்சிக்குரிய விஷயம். ‘ஆயிரம் பூக்கள் மலரட்டும்’ என்பது பணிப்பாளரின் கனவு. அந்தக் கனவின் பாதி இந்தத் தொகுப்பில் நிறைவேறியிருக்கிறது.  

மரபிலிருந்து பிரியாதவர்கள் , மரபை ஒரேயடியாக உதறித் தள்ளாமல் பேச்சோசையைக் கவிதைகளில் கையாண்டவர்கள் , மரபை நிராகரித்து  வசன கவிதையை முற்றாகக் கையாண்டவர்கள், கவிதை என்பதே கைவராதவர்கள் என எல்லா வகையினரையும் ‘கிழக்கின் கவிக் கோர்வை’ என்ற இந்தத் தொகுப்பில் சந்திக்க முடியும்.   இந்தத் தொகுப்பிலுள்ளவர்களை வகைப்படுத்தி, ஒவ்வொரு கவிதையாக எடுத்துக் காட்டிப் பேச முடியும். என்றார்.


(வி.ரி. சகாதேவராஜா)