தேசிய
சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையானது 2024ம் ஆண்டு மட்டக்களப்பு
மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 80 பாடசாலைகளின் சிறுவர் பாதுகாப்பு
குழுக்களை மீளாய்வு செய்து அதற்கான தரங்களை இட்டிருந்தது.
அந்த
வகையில் மண்முனை தென் எருவில்பற்று, போரதீவுப்பற்று, மண்முனைப்பற்று
மற்றும் மண்முனை தென்மேற்கு ஆகிய பிரதேச செயலக பிரிவுகளிலிருந்து
பங்கேற்றிருந்த பாடசாலைகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
நேற்று(25)பிரதேச செயலாளர் உ. உதயஸ்ரீதர் தலைமையில் இடம்பெற்றது.
சிறுவர்
பாதுகாப்பு உத்தியோகத்தர் திருமதி அஜந்தா தவசீலனின் ஒருங்கிணைப்பில்
நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உளநல வைத்திய
நிபுணர் மருத்துவர். கமல்ராஜ்ஜினால் பாடசாலைகளில் இடம்பெறுகின்ற உளநலம்
சார் பிரச்சினைகளும், சவால்களும் மற்றும் அவற்றை எவ்வாறு தீர்த்துக்கொள்வது
தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது.
அத்தோடு
மாவட்ட உத்தியோகத்தர்களினால் கலந்து கொண்டோருக்கு சிறுவர் பாதுகாப்பு
தொடர்பான மேலதிக விளக்கங்களும், அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டது.
மேலும்
எதிர்காலங்களில் பாடசாலைகளுடன் நெருக்கமாக செயற்பட்டு, பிள்ளைகள் தொடர்பான
பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதற்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்களுடன்
இணைந்து, பாடசாலைகள் செயற்படவேண்டும் என்ற கோரிக்கை பிரதேச செயலாளரால்
முன்வைக்கப்பட்டதுடன், கலந்து கொண்ட பாடசாலைகளுக்கான சான்றிதழ்களும்
வழங்கப்பட்டது.
இந்த
நிகழ்வில் பட்டிருப்பு மற்றும் மட்டக்களப்பு கல்வி வலயங்கள் சார்ந்து
வலயக்கல்வி உத்தியோகத்தர்கள், அதிபர்கள், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள்,
மாவட்ட செயலக சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர், மாவட்ட உள சமூக
உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலக சிறுவர் பெண்கள் பிரிவு
உத்தியோகத்தர்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.
( வி.ரி.சகாதேவராஜா)