கர்ப்பிணி பெண் ஒருவரின் வயிற்றில் பலாப்பழம் விழுந்ததில் கருவிலுள்ள சிசு உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

 


கேகாலையில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த கர்ப்பிணி பெண் ஒருவரின் வயிற்றில் பலாப்பழம் விழுந்ததில் கருவிலுள்ள சிசு உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. 

33 வயதுடைய 5 மாத கர்ப்பிணிப் பெண் ஒருவரே இந்த துயர சம்பவத்திற்கு முகங்கொடுத்துள்ளார்.

தெரணியகல, லிஹினியகல பகுதியில் உள்ள வீட்டில் கடந்த 29ஆம் திகதி இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

சீரற்ற காலநிலை காரணமாக, வீட்டுக்கு அருகிலிருந்த பலா மரத்திலிருந்து பலாப்பழம் ஒன்று வீட்டின் கூரையை உடைத்து, தூங்கிக் கொண்டிருந்த கர்ப்பிணிப் பெண் வயிற்றில் விழுந்துள்ளது.

வேதனையால் துடித்த கர்ப்பிணிப் பெண் உடனடியாக தெரணியகல வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டார்.

எனினும் வயிற்றில் இருந்த சிசு உயிரிழந்ததுடன், தாய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.