உலக சுற்றாடல் தினம் எதிர்வரும் 5 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள நிலையில் அதனை முன்னிட்டு இந்த வாரம் முழுவதும் சுற்றாடலை தூய்மையாக வைத்திருத்தல் மற்றும் பிளாஸ்டிக் பாவனையினை குறைத்தல் போன்ற விழிப்புணர்வு செயற்பாடுகள் நாடளாவிய ரீதியில் ஜனாதிபதி செயலகத்தின் வழிகாட்டலிற்கு அமைவாக இடம் பெற்று வருகின்றது.
அந்த வகையில் இன்றைய தினம் (02) திகதி மட்டக்களப்பு நகரில் மாபெரும் விழிப்புணர்வு நடை பவனியொன்று இடம்பெற்றது.
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகம் மற்றும் மட்டக்களப்பு மாநகர சபை ஆகியவற்றின் ஏற்பாட்டில் இடம்பெற்ற விழிப்புணர்வு நடை பவனியில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.சிவப்பிரியா, மாநகர ஆணையாளர் என்.தனஞ்ஜெயன், மண்முனை வடக்கு பிர தேச செயலக உதவிப் பிரதேச செயலாளர்களான லக்ஷண்யா பிரசந்தன், சுபா சதாகரன் உள்ளிட்ட உயரதிகாரிகள், உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸ் திணைக்கள அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
மண்முனை வடக்கு பிரதேச செயலக முன்றலில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட நடை பவனியுடன் மாநகர சபை முன்றலில் இருந்து மாநகர சபை ஆணையாளர் தலைமையிலான உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டு மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையம் வரை சென்று அங்கிருந்து காந்தி பூங்காவை வந்தடைந்ததும் பொலித்தின் பாவனையை கட்டுப்படுத்தும் தொனிப்பொருளில் வீதி நாடகம் ஒன்றும் அரங்கேற்றப்பட்டது.
அத்தோடு விழிப்புணர்வு நடை பவனியில் ஈடுபட்டோர் பல்வேறுபட்ட விழிப்புணர்வு வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு நடை பவனியினை மேற்கொண்டதுடன், பிளாஸ்டிக் கழிவுப் பொருட்கள் இதன்போது சேகரிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.