தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது! அதன்படி, பேருந்து கட்டணங்கள் 2.5 சதவீதம் குறைக்கப்படவுள்ளன. இந்தக் கட்டணக் குறைப்பு எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வருடாந்தம் ஜூலை 1 ஆம் திகதி பேருந்து கட்டணங்கள் திருத்தப்பட வேண்டும் என்ற தேசிய பேருந்து கட்டணக் கொள்கையின்படி, இன்று (ஜூன் 25) பிற்பகல் போக்குவரத்து அதிகாரிகளுக்கும் பேருந்து சங்கங்களுக்கும் இடையே இது குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது.
ஆரம்பத்தில் போக்குவரத்து அதிகாரிகள் 2% அல்லது அதற்கு மேல் கட்டணங்களைக் குறைக்க யோசனை தெரிவித்திருந்தனர்.
இருப்பினும், இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, இந்தச் சிறிய சதவீதக் குறைப்பால் பயணிகளுக்கோ அல்லது பேருந்து உரிமையாளர்களுக்கோ குறிப்பிடத்தக்க பலன் கிடைக்காது என்றும், இது ஒரு ரூபாய் அல்லது இரண்டு ரூபாய் அளவில் மட்டுமே இருக்கும் என்றும் தனது எதிர்ப்பைத் தெரிவித்தார்.