மட்டக்களப்பு - வவுணதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் யானையின் தாக்குதலுக்குள்ளாகி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வவுணதீவு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட நாவற்காடு பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 69 வயதுடைய வைரமுத்து மகாலிங்கம் என்பவரே யானையின் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.
தனது வீட்டிலிருந்து நேற்று இரவு 7:30 மணிக்கு புறப்பட்டதாக உயிரிழந்தவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். பாலக்காடு பகுதிக்கு விவசாய நடவடிக்கைக்காக சென்ற விவசாயியே யானையின் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் விசாரணைகளை முன்னெடுத்ததுடன், சடலத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் உறவினரிடம் சடலத்தை ஒப்படைக்குமாறு வவுணதீவு பொலிசாரை பணித்துள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுணதீவு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.