
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஐந்து உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்க இலங்கை தமிழ் அரசு கட்சிக்கும் ஶ்ரீலங்கா முஸ்லீம் காங்ரஸிற்கும் இடையில் செவ்வாய்க்கிழமை (27) ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் திருகோணமலை மாவட்டக்கிளைத் தலைவருமான சன்முகம் குகதாசன் மற்றும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளர் எம். எஸ்.தௌபீக் ஆகியோருக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
அந்த வகையில் திருகோணமலை மாநகர சபையில் ஆட்சி அமைக்க இலங்கை தமிழரசுக் கட்சிக்கு முஸ்லிம் காங்கிரஸ் பூரண ஆதரவு வழங்கும்.மூதூர் பிரதேச சபையில் முதல் 2 வருடம் இலங்கை தமிழரசுக் கட்சியும்,இறுதி 2 வருடம் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரும் தலைவராக செயற்படுவர்.குச்சவெளி பிரதேச சபையில் முதல் 2 வருடம் முஸ்லிம் காங்கிரசும் இறுதி 2 வருடம் இலங்கை தமிழரசுக் கட்சியும் தலைவர் பதவியை வகிக்கும்.பட்டினமும் சூழலும் மற்றும் தம்பலகாமம் பிரதேச சபைகளில் இரு கட்சிகளும் இணைந்து செயல்பட்டு ஆட்சியமைப்பது என்றும் இரு கட்சிகளுக்கிடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
மேலும் வரவுள்ள மாகாண சபைத் தேர்தலிலும் இணைந்து செயற்பட கட்சிகள் இரண்டும் கொள்கையளவில் இணக்கம் தெரிவித்துள்ளன என்று எம்.எஸ்.தெளபீக் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.