இலங்கை
தமிழரசு கட்சி அம்பாறை மாவட்டத்தில் ஆறு சபைகளிலே போட்டியிட்டது. இதில்
ஆட்சி அமைப்பது அல்லது யாருடன் இணைந்து அமைப்பது ,தவிசாளர் உப தவிசாளர்
தெரிவு , மேலதிக பட்டியல் உறுப்பினர் தெரிவு என்பன முற்று முழுதாக
கட்சியைப் பொறுத்தது. அதை நிறைவேற்ற ஓரிரு நாட்களில் எமது கட்சியின் தலைவர்
சிவிகே.சிவஞானம் மற்றும் செயலாளர் ம.சுமந்திரன் ஆகியோர் அம்பாறை
மாவட்டத்திற்கு வருகை தரவிருக்கின்றனர்.
இவ்வாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணியின் செயலாளரும் கல்முனை தொகுதி இணைப்பாளருமான அருள். நிதான்சன் தெரிவித்தார் .
சமகாலத்தில்
சில சபைகளில் தவிசாளர் தெரிவு தொடர்பாக பல்வேறுபட்ட கருத்துக்கள்
தெரிவிக்கப்பட்டு வருகின்றன. மேலதிக பட்டியலில் தெரிவாவது யார்? போன்ற
விடயங்கள் தொடர்பாக கேட்டபோது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது .
எப்படி
ஆட்சி அமைப்பது ? யாருடன் இணைந்து ஆட்சி அமைப்பது ? தொடர்பாக நேற்று
முன்தினம் கட்சியின் அரசியலமைப்புக்குழுக் கூட்டத்தில் சமர்ப்பித்து
முடிவெடுக்கப்பட்டு விட்டது.
எனவே அதையிட்டு உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் தொண்டர்கள் அலட்டிக் கொள்ளவிதேவையில்லை.
தவிசாளர் தெரிவைப் பொறுத்தவரையிலே அது முழுக்க முழுக்க கட்சியைச் சார்ந்தது.
ஒரு வேட்பாளர் முன்னாள் தவிசாளராக இருக்கலாம்; முன்னாள் உறுப்பினராக இருக்கலாம்; ஏன் புதியவர்களாக கூட இருக்கலாம்.
யார்
எப்படி இருந்தாலும் அது கட்சியினுடைய தீர்மானத்தை பொறுத்தே அமையும்.
மேலதிக பட்டியலில் தெரிவாகும் உறுப்பினர்கள் யார்? என்பது பற்றியும்
அம்பாறையில் நடைபெறும் சந்திப்பிலே கலந்துரையாடி நிவர்த்தி செய்து கொள்ள
முடியும் என்றார்.
( வி.ரி.சகாதேவராஜா)