
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோய்த் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் அம்கோர் தேசிய தன்னார்வ தொண்டு நிறுவனத்தினால் கிணறுகளில் விடுவதற்காக உயிரியல் முறைமையில் டெங்கு நுளம்பின் குடம்பிகளை உண்ணும் குராமி வகை மீன் குஞ்சுகள் மக்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்துடன் இணைந்து வழங்கப்படுகின்றன.
அந்தவகையில் செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி கீர்த்திகா மதனழகன் தலைமையில் எமது சமூகம் ஐக்கிய இராச்சியம் அமைப்பின் நிதி அனுசரணையில் மீன் குஞ்சுகள் இலவசமாக வழங்கும் நிகழ்வு 29.05.2025 அன்று நடைபெற்றது.
நிகழ்வில் டெங்கு நுளம்பின் தாக்கம், அதிலிருந்து சமூகத்தை பாதுகாப்பது மற்றும் வழங்கப்படும் மீன் குஞ்சுகளை எவ்வாறு பராமரிப்பது, அதன் செயற்பாடுகள் குறித்தும் மக்களுக்கும் தெளிவுபடுத்தப்பட்டதுடன் அதிதிகளால் பயனாளிகளுக்கு மீன் குஞ்சுகள் பகிர்ந்தளிக்கப்பட்டு கிணறுகளிலும் விடப்பட்டன.
இதுவரை நான்கு சுகாதார வைத்திய அதிகார பிரிவுகளுக்கு 6000 ஜோடி மீன்குஞ்சுகள் வழங்கப்பட்டுள்ளதுடன் மேலும் 05 சுகாதார வைத்திய அதிகார பிரிவுகளுக்கு 7500 ஜோடி மீன்குஞ்சுகள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆர். முரளீஸ்வரன், எமது சமூகம் ஐக்கிய இராச்சியம் அமைப்பின் பிரதிநிதிகளான சாம் வேணுகோபால், வைத்திய கலாநிதி காந்தா நிரஞ்சன், அம்கோர் நிறுவனத்தின் ஸ்தாபகரும் நிறைவேற்றுப் பணிப்பாளருமான ப.முரளிதரன், AMCOR நிறுவனத்தின் சிரேஷ்ட நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் Y.சிவயோகராஜன் மற்றும் பொது சுகாதார பரிசோதகர் தவேந்திரராஜா, கிராம சேவை உத்தியோகத்தர்கள், கிராம சுகாதார வைத்திய அதிகாரிகள், பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.