லண்டனைச் சேர்ந்த இளம் பெண் 46 கிலோ கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில்



 தெற்கு லண்டனைச் சேர்ந்த 21 வயது இளம் பெண்ணான சார்லோட் மே லீ, £1.2 மில்லியன் மதிப்புள்ள 46 கிலோ கஞ்சாவுடன் இலங்கையில் கைது செய்யப்பட்டு, நீர் கொழும்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த வாரம் தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கில் இருந்து கொழும்பு பண்டாரநாயக்க விமான நிலையத்திற்கு வந்தபோது, அவரது உடைமைகளில் “குஷ்” எனப்படும் கஞ்சா மருந்து இருப்பது கண்டறியப்பட்டது. இது 1967ஆம் ஆண்டு விமான நிலையம் திறக்கப்பட்ட பிறகு கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய கஞ்சா அளவு என இலங்கை சுங்கத்துறை தெரிவித்துள்ளது.



கடந்த ஞாயிற்றுக்கிழமை, நீர்கோழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சார்லோட், மேலும் 14 நாட்கள் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டார். இவர் முன்னாள் விமானப் பணிப்பெண்ணாக பணியாற்றியவர் ஆவார்.

**சிறையில் கடுமையான அனுபவம்**

சார்லோட், சிறையில் தனக்கு மோசமான நடவடிக்கைகள் இடம்பெறுவதாக குற்றம்சாட்டியுள்ளார். உள்ளூர் போதைப்பொருள் தடுப்பு பிரிவில் மூட்டைப்பூச்சிகள் நிறைந்த சோபாவில் ஒரு வாரம் தூங்கியதாகவும், தனது ADHD மருந்துகளை வழங்க சிறை அதிகாரிகள் மறுத்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், உணவு மிகவும் காரமாக இருப்பதால் இரண்டு நாட்களாக உணவு உட்கொள்ளவில்லை என்றும் தெரிவித்தார்.

“இங்கு நான் சிக்கிக்கொண்டேன். நேர்மறையாக இருக்க முயற்சிக்கிறேன், வேறு வழியில்லை. ஆனால், இங்கு எனக்கு மனித உரிமைகள் இல்லை என்று உணர்கிறேன்,” என்று அவர் கூறினார். “குளியல் என்று சொல்வது வெறும் வாளியில் தண்ணீர் ஊற்றுவது மட்டுமே. அதற்கு எந்த உபகரணங்களும் தருவதில்லை. ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று மணி நேரம் மட்டுமே வெளியில் வெயிலில் இருக்க அனுமதிக்கப்படுகிறோம்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

**“நான் அறியாமல் சிக்கவைக்கப்பட்டேன்”**

சார்லோட், தனது உடைமைகளில் போதைப்பொருள் இருந்தது தனக்கு தெரியாது என்றும், தான் யாரோ ஒருவரால் சிக்கவைக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். “எனது மூன்று வழக்கறிஞர்களிடம் உணவு மாற்றம் குறித்து கூறியுள்ளேன், ஆனால் இன்னும் எதுவும் செய்யப்படவில்லை,” என்று அவர் வேதனை தெரிவித்தார்.

**பிரித்தானிய அரசின் ஆதரவு**

பிரித்தானிய வெளியுறவு அலுவலக செய்தித் தொடர்பாளர், “இலங்கையில் கைது செய்யப்பட்ட ஒரு பிரித்தானியப் பெண்ணுக்கு ஆதரவு அளிக்கிறோம். அவரது குடும்பத்தினருடனும், உள்ளூர் அதிகாரிகளுடனும் தொடர்பில் உள்ளோம்,” என்று தெரிவித்தார்.

சார்லோட்டின் வழக்கு மேலும் விசாரணைக்காக நீதிமன்றத்தில் தொடர்கிறது.