2025இல் நடைபெறவுள்ள உலகக் கிண்ண சதுரங்க போட்டியில் 8 வயதுக்கு உட்பட்ட மாணவிகளுக்கான போட்டியில் தெரிவு செய்யப்பட்ட மகளுக்கு நிதி அனுசரணை வேண்டி நிற்கும் தந்தை .

 


யாழ்ப்பாணம் -  இணுவில் பகுதியை சேர்ந்த கஜிசனா தர்சன் என்ற சிறுமி 2025இல் நடைபெறவுள்ள  உலகக் கிண்ண சதுரங்க போட்டியில் 8 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கள் பிரிவு போட்டிக்கு தெரிவாகியுள்ளார். 

இது குறித்து அவரது தந்தை இன்றையதினம் ஊடக சந்திப்பு ஒன்றினை நடாத்தினார். 

இதன்போது அவர் கருத்து தெரிவிக்கையில்,

எனது மகள் 2025இல் நடைபெறவுள்ள உலகக் கிண்ண சதுரங்க போட்டியில் எட்டு வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் போட்டியிடுவதற்கு தெரிவாகியுள்ளார். 

எட்டு வயதிலேயே எனது மகளுக்கு இந்த சந்தர்ப்பம் கிடைத்ததையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். அதுமட்டுமல்ல, எனது மகள் இந்த ஆண்டு 5 சர்வதேச போட்டிகளில் விளையாடவுள்ளார்.

கடந்த மாதம் அல்பேனியாவில் நடைபெற்ற மேற்கு ஆசிய இளையோர்களுக்கான போட்டி நடைபெற்றது. 

அந்த போட்டியில் பங்குபற்றுவதற்கு நிதி அனுசரணையாளர்கள் கிடைக்காததால் அதில் பங்குபற்ற முடியவில்லை.

இவர் கடந்த வருடம் தேசிய ரீதியாக நடைபெற்ற சதுரங்க போட்டியில் முதலிடத்தை பெற்று, இலங்கையின் 8 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் உத்தியோகபூர்வ வீரராக தெரிவு செய்யப்பட்டு தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய பாடசாலைகள் இறுதிப் போட்டியில் கலந்துகொண்டு இரண்டு சர்வதேச வெண்கலப் பதக்கத்தை பெற்றுக்கொண்டார்.